பெங்களூர்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆகி இருந்தாலும், இந்த போட்டியில் வெற்றி பெற முடியும். அதற்கான அரிய சூழ்நிலை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. என்ன செய்தால் இந்தியா இந்தப் போட்டியில் வெற்றி பெறலாம்? என்பதை பார்க்கலாம்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து மோதும் முதல் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டம் மழையால் முற்றிலுமாக கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது நாள் அன்று போட்டி தொடங்கியது. இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து வெறும் 46 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அடுத்து முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 402 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 356 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது.

இந்த நிலையிலும் மனம் தளராமல் இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி மூன்றாம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்து இருக்கிறது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அரை சதம் அடித்து ஆட்டமிழந்தனர். சர்ஃபராஸ் கான் 70 ரன்கள் அடித்த நிலையில் களத்தில் இருக்கிறார்.
நான்காம் நாள் அன்று கே எல் ராகுல், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் பேட்டிங் செய்ய உள்ளனர். இந்த நிலையில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்றால் 356 ரன்கள் பின்தங்கி இருக்கும் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் குறைந்தது 600 ரன்கள் எடுக்க வேண்டும்.
அதை செய்தால் மட்டுமே இந்த போட்டியில் வெற்றி பெறுவதைப் பற்றி இந்திய அணி நினைக்க முடியும். சர்ஃபராஸ் கான் அதிரடியாக ஆடி வருவதால் அவர் சதத்தை தாண்டியும் நீண்ட நேரம் களத்தில் இருந்து அதிரடியாக ரன் சேர்ப்பதை உறுதி செய்ய வேண்டும். கே எல் ராகுல், ரிஷப் பண்ட், ஜடேஜா, அஸ்வின் ஆகிய நால்வரும் சேர்ந்து 250 முதல் 300 ரன்கள் சேர்க்க வேண்டும்.
இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 550 ரன்கள் எடுத்தால் 200 ரன்கள் முன்னிலை பெறும். ஆனால், 200 ரன்கள் இலக்கை நியூசிலாந்து அணி எளிதாக எட்டி விட வாய்ப்பு உள்ளது. இந்தியா 600 ரன்கள் சேர்த்து 250 ரன்கள் முன்னிலை பெற்றால் இந்திய அணி ஓரளவுக்கு நியூசிலாந்து அணிக்கு அழுத்தம் அளித்து இந்த போட்டியில் வெற்றி பெறலாம்.
அதே சமயம், இந்திய அணி நான்காம் நாள் அன்று அதிரடி ஆட்டம் ஆடி 650 ரன்கள் எடுத்தால் அதன் மூலம் 300 ரன்கள் முன்னிலை பெறும். பின்னர் ஐந்தாம் நாள் அன்று அதிக விரிசல் மிகுந்த பிட்ச்சில் சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி நியூசிலாந்து அணியின் 10 விக்கெட்களையும் எளிதாக வீழ்த்த முடியும். அது மட்டுமே தற்போது இந்திய அணிக்கு உள்ள எளிதான வெற்றி வாய்ப்பாகும். நான்காம் நாள் அன்று இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் அதிக ரன் சேர்க்கவில்லை என்றாலோ, விரைவாக விக்கெட்களை இழந்தாலோ இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு கேள்விக் குறியாகி விடும்.