பெங்களூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 462 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. இதனால் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 107 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், இந்திய அணி தோல்வியை தவிர்க்க போராடுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
2001ஆம் ஆண்டு கொல்கத்தா மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி வெறும் 171 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதனால் ஆஸ்திரேலியா அணி ஃபாலோ ஆன் கொடுத்தது.

274 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி 2வது இன்னிங்ஸை தொடங்கியது. அன்றைய நாளில் இந்திய அணி டிரா செய்யக் கூட வாய்ப்பில்லை என்று பார்க்கப்பட்டது. ஆனால் விவிஎஸ் லக்ஷ்மண் - ராகுல் டிராவிட் இருவரும் ஒருநாள் முழுக்க பேட்டிங் செய்து ஆஸ்திரேலியா அணிக்கு அதிர்ச்சியை கொடுத்தனர். 2வது இன்னிங்ஸில் இந்திய அணி 657/7 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
அதன்பின் ஆஸ்திரேலியா அணி 212 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மிகச்சிறந்த வெற்றி இதுதான். ஃபாலோ ஆன் பெற்ற பின் இந்திய அணி ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டெழுந்து மிரட்டியது. தற்போது அப்படியான ஒரு ஆட்டத்தை 23 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இந்திய அணி வீரர்கள் வெளிப்படுத்தினர்.
பெங்களூர் மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி 402 ரன்கள் குவித்தது. இதனால் இந்திய அணி 2வது இன்னிங்ஸை 356 ரன்கள் பின் தங்கிய நிலையில் தொடங்கியது. டிரா செய்வதற்கே மிகப்பெரிய திட்டம் தேவை என்ற நிலை இருந்தது.
இதனால் மழை வந்து தான் இந்திய அணியை காப்பாற்ற வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கருதினர். ஆனால் டிரா செய்வது எங்களின் திட்டமல்ல.. வெற்றி பெறுவதே எங்களின் திட்டம் என்று அட்டாக்கிங் ஸ்டைலில் பொளந்து கட்டியது. கேப்டன் ரோஹித் சர்மா 63 பந்துகளில் 52 ரன்களும், விராட் கோலி 102 பந்துகளில் 70 ரன்களும் எடுத்து வெளியேறினர். இதன்பின் சர்ஃபராஸ் கான் - ரிஷப் பண்ட் இருவரும் பொளந்து கட்டினர்.
இந்திய வீரர்களுக்கு ஸ்பின் வீசினால் என்ன நடக்கும் என்பதை இருவரும் பேட் மூலம் பதிலாக அளித்தனர். 356 ரன்கள் பின் தங்கியதை பற்றி எந்த கவலையும் கொள்ளாமல், அசால்ட்டாக அந்த ரன்களை எட்டினர். சர்ஃபராஸ் கான் அபார சதமும், ரிஷப் பண்ட் அரைசதமும் அடித்து அசத்தியதன் மூலமாக இந்திய அணி ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டது.
இந்திய அணியின் ஸ்கோர் 400 ரன்களை கடந்ததோடு, நியூசிலாந்து அணியை விடவும் 50 ரன்கள் முன்னிலை பெற்றது. இன்னும் இந்திய அணியின் கைகளில் 7 விக்கெட்டுகள் இருந்ததால், நிச்சயமாக வெற்றி பெறுவதற்கே வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த சில ஓவர்களிலேயே இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சீட்டுக் கட்டைப் போல் சரிந்தனர். இதனால் இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 462 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.
இதனால் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 107 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடைசி நாள் ஆட்டத்தின் இந்திய அணியின் ஸ்பின்னர்களான அஸ்வின், ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் மூவரை எதிர்த்து பேட்டிங் செய்வது எளிதான விஷயமல்ல. ஆனால் போதிய இலக்கு நிர்ணயிக்கப்படவில்லை என்பதால், இந்திய அணியை காப்பாற்ற மழை வந்தால் மட்டுமே வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.