சென்னை: நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்விக்கு நானும் முக்கியமான காரணம் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். இந்த தோல்வி தன்னை நொறுக்கிவிட்டதாக கூறிய அவர், கூடுதலாக 20 முதல் 30 சதவிகிதம் பங்களித்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. 12 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்ததோடு, 92 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் முதல்முறையாக 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷாகி ஏமாற்றம் அளித்துள்ளது.

இந்த நிலையில் நியூசிலாந்து டெஸ்ட் தொடர் தோல்வி குறித்து இந்திய அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுகையில், நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் வீழ்த்திய பின், அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு எங்களால் மீண்டு வரவே முடியவில்லை. இந்த தோல்வியை ஏற்பதற்கே சில நாட்கள் பிடித்தது. இந்திய தோல்வி என்னை நொறுக்கிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
இதுவரை ஏராளமான முறை தோல்வியை சந்தித்திருக்கிறோம். ஆனால் வாழ்க்கையில் இதுதான் மோசமான தோல்வியாக நினைக்கிறேன். இந்த தோல்விக்கு நானும் மிக முக்கியமான காரணம். கீழ் வரிசை பேட்டிங்கில் என்னால் கொஞ்சம் கூட பங்களிக்க முடியவில்லை. சில இன்னிங்ஸ்களில் சிறப்பாக தொடங்கிய போதும், அடுத்த சில நேரங்களில் சொதப்பிவிட்டேன்.
அதேபோல் நியூசிலாந்து அணி மிகச்சிறந்த கிரிக்கெட்டை விளையாடியது. நியூசிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் கால்களில் அடியே வாங்கவில்லை. இந்திய அணி அதிர்ஷ்டத்தை தங்கள் பக்கம் கொண்டு வர எந்த முயற்சியும் செய்யவில்லை. என்னால் கூடுதலாக 20 முதல் 30 சதவிகிதம் வரை பங்களித்திருக்க முடியும். ஆனால் பேட்டிங், பவுலிங்கில் சொதப்பிவிட்டேன்.
டெய்லண்டர்கள் ரன்கள் சேர்ப்பது தங்கத்திற்கு ஈடானது. இந்த டெஸ்ட் தொடரில் அது நடக்கவில்லை. இந்த தோல்விக்கு பின் சிலர் விமர்சித்தது வருத்தமாக இருந்தது. இந்திய அணி வீரர்கள் அனைவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு விமர்சித்தார்கள். இதுவொரு விளையாட்டு என்பதை அனைவருக்கும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
இந்த தோல்வியால் அனைவருக்கும் வருத்தம் தான். ஆனால் இந்திய அணி வீரர்கள் அளவிற்கு யாருக்கும் வருத்தம் இருக்காது. அந்த வருத்தத்தை சந்தேகிப்பது சரியல்ல. ஒவ்வொரு வீரரின் கிரிக்கெட் வாழ்க்கையும் களத்தில் என்ன செய்கிறோம் என்பதை பொறுத்தே அமைகிறது. ஆனால் வீரர்களின் குணங்களை சந்தேகிப்பது ஏற்புடையதல்ல என்று தெரிவித்துள்ளார்.