இந்தூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்து தொடரை இழந்தது ஒருபுறம் இருக்க, கேப்டன் சுப்மன் கில்லின் செயல்பாடுகள் தற்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. நேரலையில் வர்ணனை செய்து கொண்டிருந்த முன்னாள் நியூசிலாந்து வீரர் இயன் ஸ்மித், சுப்மன் கில்லை கடுமையாகச் சாடியுள்ளார்.
இந்தூர் மைதானத்தில் டாஸ் வென்று பந்துவீசிய இந்திய அணிக்கு அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா மூலம் சிறப்பான துவக்கம் கிடைத்தது. முதல் இரண்டு ஓவர்களிலேயே நியூசிலாந்து துவக்க வீரர்கள் வெளியேறினர். ஆனால், அதன் பிறகு நடந்ததெல்லாம் இந்திய அணிக்குச் சோகக் கதைதான்.

நியூசிலாந்து அணி 58 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், டாரில் மிட்செல் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஜோடி இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்தது. இந்த இக்கட்டான நேரத்தில், பார்ட்னர்ஷிப்பை உடைக்க என்ன செய்வது என்று தெரியாமல் கேப்டன் சுப்மன் கில் விழிபிதுங்கி நின்றார். அவரிடம் எந்த மாற்று திட்டமும் இல்லாதது அப்பட்டமாகத் தெரிந்தது.
நியூசிலாந்து வீரர்கள் அடித்து நொறுக்கியபோது, பந்துவீச்சாளர்களிடம் சென்று பேசுவது, பீல்டிங் செட் செய்வது போன்ற வேலைகளை விக்கெட் கீப்பர் கே.எல். ராகுல் தான் செய்து கொண்டிருந்தார். குறிப்பாக 43வது ஓவரில் அர்ஷ்தீப் சிங் பந்துவீசும்போது, ராகுல் தான் அவரிடம் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது கேப்டன் சுப்மன் கில் தூரமாக லாங்-ஆஃப் திசையில் பீல்டிங் செய்து கொண்டிருந்தார்.
இதனை நேரலையில் கவனித்த நியூசிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் இயன் ஸ்மித், கில்லின் கேப்டன்சியை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறியதாவது: "சுப்மன் கில் கேப்டன்சியை இப்போதுதான் கற்றுக் கொண்டிருக்கிறார் என்று எனக்குத் தெரியும். ஆனால், ஒரு கேப்டன் அணியின் நடவடிக்கைகளில் மையப்புள்ளியாக இருக்க வேண்டும்."
"அணி நெருக்கடியில் இருக்கும்போது, கேப்டன் லாங்-ஆஃப் பவுண்டரிக்குச் சென்று நிற்பது சரியல்ல. இது அவரை ஆட்டத்தின் முக்கியப் போக்கிலிருந்து துண்டித்துவிடுகிறது. கே.எல். ராகுல் தான் அர்ஷ்தீப் சிங்கிடம் பேசிக்கொண்டிருக்கிறார். பொதுவாக வைஸ்-கேப்டன்கள் அல்லது கேப்டன்கள் செய்ய வேண்டிய வேலையை ராகுல் செய்து கொண்டிருக்கிறார். கில் இன்னும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும்" என்று ஸ்மித் சாடினார்.
அதேவேளையில் கில்லுக்கு ஆதரவாகவும் ஒரு கருத்தை ஸ்மித் முன்வைத்தார். "இந்த இந்திய அணியை வழிநடத்துவது ஒரு இளம் வீரருக்கு மிகவும் கடினமானது. ஏனென்றால் அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல் போன்ற முன்னாள் கேப்டன்களும், சீனியர் வீரர்களும் உள்ளனர். அவர்கள் மத்தியில் கேப்டனாகத் தனது அதிகாரத்தைச் செலுத்துவது கில்லுக்குச் சவாலாக இருக்கலாம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் 1-2 எனத் தொடரை இழந்த கில், தற்போது சொந்த மண்ணிலும் நியூசிலாந்திடம் 1-2 எனத் தொடரை இழந்துள்ளார். கில்லின் கேப்டன்சி மீது எழுந்துள்ள இந்த விமர்சனம் பிசிசிஐ கவனத்திற்குச் செல்லுமா?