
தொடரில் வெற்றி
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி முதல் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஐந்தாவது மற்றும் கடைசிப் போட்டி ஞாயிறு அன்று நடைபெற உள்ளது. அந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று வைட்வாஷ் செய்ய காத்துக் கொண்டுள்ளது இந்திய அணி.

சொதப்பல்
இந்த நிலையில் தான் நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி செய்த சொதப்பலால் அபராதம் விதித்துள்ளது ஐசிசி. அந்தப் போட்டியில் சூப்பர் ஓவர் வரை சென்று இந்தியா வென்றது. முன்னதாக நியூசிலாந்து கையில் இருந்த வெற்றியை தட்டிப் பறித்து டை செய்தது இந்திய அணி.

இந்தியா பேட்டிங்
நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ராகுல், மனிஷ் பாண்டே மட்டுமே ரன் குவித்தனர். மற்ற பேட்ஸ்மேன் சொதப்பினர். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது.

நியூசிலாந்து அபாரம்
அந்த அணி முதலில் நிதானமாக பேட்டிங் செய்தாலும், பின்னர் அதிரடி ஆட்டம் ஆடி ரன் குவித்தது. கடைசி ஓவரில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு வந்தது அந்த அணி. அப்போது ஷர்துல் தாக்குர் 20வது ஓவரை வீசினார்.

போட்டி டை
ஷர்துல் தாக்குர் சிறப்பாக பந்து வீச, அந்த ஓவரில் இரண்டு விக்கெட்கள் பந்துவீச்சிலும், இரண்டு விக்கெட்கள் ரன் அவுட்டிலும் கிடைத்தது. நியூசிலாந்து அணியால் போராடி 6 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இரு அணிகளும் 165 ரன்கள் எடுக்க, போட்டி டை ஆனது.

சூப்பர் ஓவர்
போட்டியின் முடிவு சூப்பர் ஓவரில் நிர்ணயம் செய்யப்பட்டது. முன்னதாக நடந்த மூன்றாவது டி20 போட்டியும் சூப்பர் ஓவர் வரை சென்ற நிலையில், இந்தப் போட்டியும் சூப்பர் ஓவர் வரை சென்றது. இரண்டு போட்டியிலுமே நியூசிலாந்து அணி வெற்றிக்கு அருகே வந்து சொதபி டை செய்தது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் நேரம்
சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி பெற்றது. போட்டியில் வென்றாலும், முன்னதாக நியூசிலாந்து அணியை கட்டுப்படுத்த இந்திய அணி பந்துவீச்சின் போது திட்டமிட கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. பந்துவீச்சாளர்கள், கேப்டன் கோலி பல முறை விவாதம் செய்தனர். பீல்டர்கள் பல முறை மாற்றப்பட்டனர்.

இரண்டு ஓவர்கள்
இது போன்ற காரணங்களால் இந்திய அணியால் குறிப்பிட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை வீச முடியவில்லை. இரண்டு ஓவர்கள் குறிப்பிட்ட கால அளவைத் தாண்டி சென்றது. இது ஐசிசி விதிப்படி குற்றம் ஆகும். போட்டியின் முடிவில் அம்பயர்கள் இது குறித்து புகார் அளித்தனர்.

அபராதம்
போட்டிக்கு பின் நடந்த விசாரணையில் கேப்டன் விராட் கோலி, குற்றத்தை ஒப்புக் கொண்டார். ஐசிசியின் விதிப்படி கேப்டன் மட்டுமின்றி, அணி வீரர்களும் கூடுதல் ஓவர் குற்றத்திற்கு பொறுப்பாக வேண்டும். அதன்படி அனைத்து இந்திய வீரர்களுக்கும் போட்டி சம்பளத்தில் அபராதம் விதிக்கப்பட்டது.

40 சதவீதம்
குறிப்பட்ட நேரத்தை தாண்டி சென்ற ஒவ்வொரு ஓவருக்கும் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்ற விதி உள்ளது. இந்திய அணி கடைசி இரண்டு ஓவர்கள் வீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதால் இந்திய வீரர்களுக்கு போட்டி சம்பளத்தில் 40 சதவீதம் அபராதம் விதித்தது ஐசிசி.


Click it and Unblock the Notifications