மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 263 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியுள்ளது. இதன் மூலமாக முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 28 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 235 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதன்பின் 2வது நாள் ஆட்டத்தை சுப்மன் கில் - ரிஷப் பண்ட் கூட்டணி தொடங்கியது. இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்ததால், இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் 36 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து 5வது விக்கெட்டுக்கு 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், ரிஷப் பண்ட் 59 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் வந்த ஜடேஜா 14 ரன்களிலும், சர்ஃபராஸ் கான் டக் அவுட்டாகியும் ஏமாற்றினார். ஆனாலும் மறுமுனையில் சிறப்பாக ஆடிய சுப்மன் கில் சதத்தை நெருங்கினார். ஆனால் அஜாஸ் படேல் பவுலிங்கில் 90 ரன்களில் ஆட்டமிழந்து சுப்மன் கில் வெளியேற, இந்திய அணி முன்னிலை பெறுவதே சந்தேகம் என்று பார்க்கப்பட்டது. பின்னர் கடைசி நேரத்தில் வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக பவுண்டரியும், சிக்சருமாய் பொளந்து கட்டினார்.
இதனால் இந்திய அணியின் ஸ்கோர் 250 ரன்களை கடந்தது. கடைசி விக்கெட்டுக்கு இணைந்த ஆகாஷ் தீப்பிற்கு வாஷிங்டன் சுந்தர் ஸ்ட்ரைக் கொடுக்க கூடாது என்பதில் கவனமாக இருந்தார். ஆனால் அஜாஸ் படேல் வீசிய 60வது ஓவரின் 4வது பந்தில் ஒரு ரன் எடுத்துவிட்டு, ஆகாஷ் தீப்பை ஸ்ட்ரைக்கிற்கு அனுப்பினார். ஆனால் அவரோ 2வது ரன் எடுக்கும் முயற்சியில் ரன் அவுட்டாகினார்.
இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. மேலும் முதல் இன்னிங்ஸில் 28 ரன்கள் முன்னிலையும் பெற்றுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதல்முறையாக முன்னிலை பெற்றிருக்கிறது. அதேபோல் நியூசிலாந்து அணி தரப்பில் நட்சத்திர ஸ்பின்னர் அஜாஸ் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.