இந்தூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய மண்ணில் முதல் முறையாக நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றி இருக்கிறது.
நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் தொடரை இழந்த முதல் ஒருநாள் கேப்டன் என்ற சோகமான சாதனையை சுப்மன் கில் படைத்திருக்கிறார். ஏற்கனவே கம்பீர் பயிற்சியாளராக இருந்தபோதுதான் முதல் டெஸ்ட் தொடரை இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி வென்ற நிலையில் தற்போது ஒரு நாள் தொடரிலும் சாதித்து இருக்கிறது.

இந்த நிலையில் தோல்விக்கு பிறகு பேசிய இந்திய அணி கேப்டன் சுப்மன் கில், முதல் போட்டி முடிவடைந்த பிறகு இரண்டாவது ஆட்டத்தில் தோல்வியை தழுவினோம். இங்கு ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் இந்தூரில் விளையாடினோம். ஆனால் நாங்கள் இந்த போட்டியில் விளையாடிய விதம் உண்மையிலேயே ஏமாற்றத்தை தருகின்றது.
சில துறைகளில் நாங்கள் சில மாற்றங்களை செய்ய வேண்டும். சில விஷயத்தில் நாங்கள் எவ்வாறு இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது குறித்து யோசிக்க வேண்டும். இந்த தொடரில் சில நல்ல விஷயங்களும் இருக்கின்றது. விராட் கோலி பேட்டிங் செய்தாலே அது எங்களுக்கு பிளஸ் தான். இதைப் போன்று ஹர்ஷித் ராணா இந்த தொடரில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார்.
பேட்டிங் வரிசையில் நம்பர் எட்டாவது இடத்தில் களமிறங்கி ரன்கள் சேர்ப்பது என்பது சுலபமான காரியம் கிடையாது. ஆனால் இந்த தொடரில் அவர் தன்னுடைய பொறுப்பை எடுத்துக்கொண்டு அபாரமாக விளையாடினார். வேகப்பந்துவீச்சாளர்கள் இந்த ஆட்டத்தில் நன்றாகவே செயல்பட்டார்கள். நாங்கள் நிதிஷ் குமாருக்கு இன்று அதிக பொறுப்புகளை வழங்கினோம்.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு அதிக பொறுப்பை கொடுத்தோம். உலகக்கோப்பை மனதில் வைத்துக் கொண்டுதான். இந்த முடிவை நாங்கள் எடுத்தோம். பந்துவீச்சில் அதிக ஓவர்கள் கொடுத்து, அவர் எப்படி செயல்படுகிறார் என்பதை நாங்கள் பார்க்க வேண்டும். அப்போதுதான் உலகக்கோப்பை க்கு முன் எந்த காம்பினேஷன் நமக்கு சரி வருகிறது. எது சரியாக வரவில்லை என்பது குறித்து தெரிய வரும் என சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.