விசாகப்பட்டினம்: சிவம் துபே ம மட்டும் ரன் அவுட் ஆகி இருக்காவிட்டால் இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் வெற்றி பெற்று இருக்கும் என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
முன்னதாக நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுத் தொடரை வென்றுவிட்ட நிலையில், இந்தப் போட்டியில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் சொதப்பினாலும், ஆல்-ரவுண்டர் சிவம் துபேவின் ஆட்டம் ரசிகர்களுக்குப் பெரும் விருந்தாக அமைந்தது. அவர் மட்டும் களத்தில் நின்றிருந்தால் போட்டியின் முடிவு நிச்சயம் மாறியிருக்கும்.

216 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. கடந்த போட்டியின் ஹீரோ அபிஷேக் சர்மா முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் (8), சஞ்சு சாம்சன் (24) மற்றும் ஹர்திக் பாண்டியா (2) என முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். 63 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி படுதோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும், மறுமுனையில் களமிறங்கிய சிவம் துபே நியூசிலாந்து பந்துவீச்சாளர்களைப் பந்தாடினார். வந்த வேகத்திலேயே சிக்ஸர் மழை பொழியத் தொடங்கினார். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகள் பறந்தன. ரிங்கு சிங் 39 ரன்கள் எடுத்து அவருக்குத் துணையாக நின்றாலும், ஆட்டத்தின் முழு கட்டுப்பாடும் துபே கையில் இருந்தது.
வெறும் 23 பந்துகளை மட்டுமே சந்தித்த சிவம் துபே, 3 பவுண்டரிகள் மற்றும் 7 இமால சிக்ஸர்களுடன் 65 ரன்கள் விளாசினார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 282-க்கும் மேல் இருந்தது. அந்த நேரத்தில் இந்திய அணியின் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டை அவர் தனி ஆளாகவே உயர்த்தினார்.
சிவம் துபே களத்தில் இருந்தவரை நியூசிலாந்து அணியின் முகத்தில் பயம் தெரிந்தது. அவர் நின்றிருந்தால் நிச்சயம் இந்திய அணி 216 ரன்களை எட்டிப்பிடித்திருக்கும். ஆனால், 15வது ஓவரில் ஏற்பட்ட ஒரு துரதிர்ஷ்டவசமான ரன் அவுட் ஆட்டத்தின் போக்கை மாற்றியது.
ரன் ஓடும்போது ஏற்பட்ட குழப்பத்தில் மேட் ஹென்றி வீசிய த்ரோவில் சிவம் துபே ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த கணமே இந்திய அணியின் வெற்றி நம்பிக்கையும் தகர்ந்தது. அவர் மட்டும் இன்னும் 3 அல்லது 4 ஓவர்கள் நின்றிருந்தால், இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்து வெற்றி பெற்றிருக்கும்.
துபே ஆட்டமிழந்த பிறகு மற்ற வீரர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் வெளியேற, இந்திய அணி 18.4 ஓவர்களில் 165 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிவம் துபேவின் அந்த ஒரு இன்னிங்ஸ், தோல்வியிலும் இந்திய ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.