மும்பை : நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சுழற் பந்துவீச்சாளர் ரவீந்திரா ஜடேஜா 10 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இந்திய அணிக்கு 147 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 235 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய இந்திய அணி 263 ரன்கள் எடுத்தது. அதன் பின் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்து வந்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் நியூசிலாந்து அணி 171 ரன்கள் எடுத்து 9 விக்கெட்களை இழந்து இருந்தது. ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

மூன்றாவது நாள் ஆட்டம் துவங்கியவுடன் நியூசிலாந்து அணி கடைசி விக்கெட்டை விரைவாக இழந்தது. ஜடேஜா கடைசி விக்கெட்டாக அஜாஸ் பட்டேல் விக்கெட்டை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் ஜடேஜா ஐந்து விக்கெட் வீழ்த்தி இருந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸிலும் ஐந்து விக்கெட் வீழ்த்தினார்.
இந்த போட்டியில் மட்டும் அவர் 10 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 174 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணிக்கு 147 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்து இருந்தது. அதன் மூலம், நியூசிலாந்து அணி 2 - 0 என தொடரை கைப்பற்றி இருந்தது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற வேண்டும் என்பதோடு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இடத்துக்கு முன்னேற இந்த வெற்றி அவசியமாக இருந்தது.
இந்த நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்க்ஸில் ஜடேஜா - அஸ்வின் அபாரமாக பந்து வீசி நியூசிலாந்து அணியை 174 ரன்களுக்கு சுருட்டி இருக்கின்றனர். இரண்டாவது இன்னிங்க்ஸில் ஜடேஜா 5 விக்கெட்களும், அஸ்வின் 3 விக்கெட்களும் வீழ்த்தினர். வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஆகாஷ் தீப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.