மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. கடைசி 12 பந்துகளில் 8 ரன்கள் எடுத்த இந்திய அணி, அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக டேரல் மிட்சல் 82 ரன்களும், வில் யங் 71 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன்பின் இந்திய அணி தரப்பில் கேப்டன் ரோஹித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவருக்கும் வான்கடே மைதானம் சொந்த மண் என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ரோஹித் சர்மா நல்ல தொடக்கம் கிடைத்தும் 18 ரன்கள் எடுத்திருந்த போது, விக்கெட்டை தாரை வார்த்து வெளியேறினார்.
பின்னர் இணைந்த ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் கூட்டணி இந்திய அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தியது. சிக்சரும், பவுண்டரியுமாய் இருவரும் விளாசி தள்ள, இவர்களின் பார்ட்னர்ஷிப் 50 ரன்களை கடந்தது. அப்போது அஜாஸ் படேல் வீசிய பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயன்ற ஜெய்ஸ்வால், போல்டாகி 30 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது ஆட்டம் முடிய சில நிமிடங்கள் மட்டுமே இருந்தது.
இதன் காரணமாக நைட் வாட்ச்மேனாக முகமது சிராஜ் களமிறக்கப்பட்டார். அவர் அடுத்த பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறியதோடு, டிஆர்எஸ் ரிவ்யூ எடுத்து வீணடித்தார். இதனால் இந்திய அணி 78 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த விராட் கோலி முதல் நாள் ஆட்டத்தை சிறப்பாக முடிப்பார் என்று பார்க்கப்பட்ட போது, திடீரென ரச்சின் ரவீந்திராவால் 4 ரன்களில் ரன் அவுட் செய்யப்பட்டார்.
வெறும் 6 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை கடைசி நிமிடங்களில் இந்திய அணி இழந்து தடுமாறியது. இதன்பின் சுப்மன் கில் - ரிஷப் பண்ட் கூட்டணி முதல் நாள் ஆட்டத்தை முடித்து பெவிலியன் சென்றது. இதனால் முதல் நாள் முடிவில் இந்திய அணி 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து களத்தில் உள்ளது. கடைசி நேரத்தில் எடுத்த மோசமான முடிவுகள் இந்திய அணிக்கு பின்னடைவாக மாறியுள்ளது. இதனால் ரசிகர்கள் அவசரம் காட்டிய விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் கம்பீர் இருவரையும் கடுமையான விமர்சித்து வருகின்றனர்.