புனே: நியூசிலாந்து அணிக்கு எதிரான் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை இழந்து இருக்கிறது. முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், புனேவில் நடந்த இரண்டாவது போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி தோல்வி அடைந்தது.
இதன் மூலம், இந்திய அணி 4331 நாட்களுக்குப் பின் சொந்த மண்ணில் முதன்முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்து இருக்கிறது. மேலும் ஒரே ஆண்டில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்து 41 ஆண்டுகளுக்கு பின் மோசமான சாதனையை செய்து இருக்கிறது. இதுவரை இந்திய மண்ணில் இந்திய அணி ஒரே ஆண்டில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் தோல்வி அடைந்த சம்பவம் இரண்டு முறை நடந்து இருக்கிறது.

1969 ஆம் ஆண்டு இந்திய அணி இந்திய மண்ணில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை சந்தித்து இருந்தது. அதன் பின் 1983 ஆம் ஆண்டு இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை சந்தித்து இருந்தது. அதன் பின் எப்போதும் இந்திய மண்ணில் ஒரே ஆண்டில் இரண்டுக்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டி தோல்விகளை இந்திய அணி சந்திக்கவில்லை.
ஆனால், 2024 ஆம் ஆண்டு இதுவரை இந்திய அணி மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து இருக்கிறது. இந்த ஆண்டின் துவக்கத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து இருந்தது. எனினும், அந்த தொடரின் அடுத்த நான்கு போட்டிகளையும் வென்று 4 - 1 என்ற அளவில் தொடரை கைப்பற்றியது இந்திய அணி.
அதன் பின் நியூசிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து இருக்கும் இந்திய அணி 2 - 0 என தொடரை இழந்து இருக்கிறது. 41 ஆண்டுகளுக்குப் பின் இந்திய மண்ணில் ஒரே ஆண்டில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை சந்தித்து இருக்கிறது.
அதேபோல கடைசியாக 2012 ஆம் ஆண்டு இந்திய அணி இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்து இருந்தது. இங்கிலாந்து அணிக்கு எதிராக அப்போது 2 - 1 என டெஸ்ட் தொடரை இழந்து இருந்தது. அதன் பின் 4331 நாட்கள் இந்திய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடர்களில் எல்லாம் இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் இருந்தது. அந்த சாதனையும் தற்போது முடிவுக்கு வந்து இருக்கிறது.