துபாய்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில், வருண் சக்கரவர்த்தியை விளையாட வைப்பது குறித்து இந்திய அணி நிர்வாகத்தில் குழப்பம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறுகிறது.
இதை அறிந்த இந்திய அணி நிர்வாகம், ஐந்து சுழற்பந்து வீச்சாளர்களை உத்தேச அணியில் தேர்வு செய்தது. எனினும், இதுவரை நடந்த இரண்டு போட்டிகளில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமே விளையாடி உள்ளனர்.

அக்சர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆல்-ரவுண்டர்களாக இருப்பதால் அவர்களை நீக்க முடியாது. பிளேயிங் லெவனில் மூன்றாவதாக இடம்பெற்ற குல்தீப் யாதவை நீக்கிவிட்டு வருண் சக்கரவர்த்தியை விளையாட வைக்கலாமா? என்பது குறித்து இந்திய அணியில் ஆலோசனை நடந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து நடந்த விவாதத்தில் குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி பந்துவீசும் வேகம் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. குல்தீப் யாதவ் 80 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசுகிறார். மறுபுறம் வருண் சக்கரவர்த்தி எப்போதாவது மட்டுமே 80 கிலோ மீட்டர் வேகத்தை எட்டுகிறார். மிகவும் மெதுவாகவே அவர் பந்து வீசுகிறார்.
துபாயில் உள்ள பிட்ச் மிகவும் மெதுவானது என்பதால், அங்கு அதிக வேகத்தில் பந்து வீசினால் சுழற் பந்துவீச்சாளர்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. அந்த வகையில் துபாய் ஆடுகளத்தில் குல்தீப் யாதவை விட வருண் சக்கரவர்த்தி அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற கணிப்பு உள்ளது.
அரையிறுதி போட்டியில் இந்த பரிசோதனை முயற்சியை செயல்படுத்த முடியாது. அதற்கு முன்னதாக குரூப் சுற்றிலேயே அதை பரிசோதித்துப் பார்த்தால் மட்டுமே, அரையிறுதி அல்லது இறுதிப் போட்டியில் வருண் சக்கரவர்த்தியை விளையாட வைக்கலாமா, வேண்டாமா? என்று முடிவை எடுக்க முடியும். எனவே, பரிசோதனை முயற்சியாக குல்தீப் யாதவை நீக்கிவிட்டு வருண் சக்கரவர்த்தியை விளையாட வைக்கலாமா என்ற விவாதம் நடந்துள்ளது.
எனினும், இதுபோன்ற சர்வதேச தொடர்களில் பிளேயிங் லெவனில் பரிசோதனை முயற்சிகள் செய்வது அணியின் சமநிலையை பாதிக்கும் என்ற ஒரு பார்வையும் இருப்பதால், கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இது குறித்து என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.