புனே: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 359 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய மண்ணில் நான்காவது இன்னிங்ஸில் 359 ரன்களை எடுப்பது என்பது கடினமான காரியம். இதுவரை ஒரு முறை மட்டுமே இந்திய மண்ணில் இந்திய அணி 300 ரன்களுக்கும் மேற்பட்ட இலக்கை டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகரமாக எட்டியிருக்கிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டி புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 259 ரன்கள் எடுத்தது. அடுத்த ஆடிய இந்திய அணி 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. முதல் இன்னிங்ஸ் முடிவில் நியூசிலாந்து 103 ரன்கள் முன்னிலை பெற்றது.

அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்திருந்தது. மூன்றாம் நாள் அன்று தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 255 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜடேஜா மூன்றாம் நாள் அன்று 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
வாஷிங்டன் சுந்தர் 4 மற்றும் அஸ்வின் 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர். இதை அடுத்து நியூசிலாந்து அணி 358 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணிக்கு 359 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் இரண்டரை நாள் ஆட்டம் இருப்பதால் இந்திய அணி நிதானமாக ஆடி இந்த இலக்கை எட்டலாம். ஆனால், பிட்ச் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதால் அதை சமாளித்தால் மட்டுமே இந்திய அணியால் 359 ரன்கள் இலக்கை எட்ட முடியும்.