பெங்களூர்: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் கனமழை காரணமாக டாஸ் கூட போடாமல் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் ஓவர்கள் வீணாணதை தவிர்க்கும் வகையில், 2வது நாள் ஆட்டத்தின் நேரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் இன்று தொடங்கவிருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாகவே பெங்களூரில் தொடர் கனமழை பெய்து வந்ததால், முதல் டெஸ்ட் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா என்ற சந்தேகம் இருந்தது.

இந்த நிலையில் காலையில் சில மணி நேரம் மழை பெய்யாமல் இருந்ததால், ஆட்டம் தொடங்குவதில் எந்த தாமதமும் இருக்காது என்று பார்க்கப்பட்டது. ஆனால் காலை 8.30 மணி முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இதனால் சின்னச்சாமி மைதான ஊழியர்கள் உடனடியாக தார்பாய் கொண்டு மைதானத்தில் பல்வேறு பகுதிகளையும் மூடினர்.
இதனைத் தொடர்ந்து மழை கொஞ்சம் கூட குறையாததால், உணவு இடைவேளை கொடுக்கப்பட்டது. இதனிடையே இந்திய வீரர்களும் உள் அரங்குகளில் பயிற்சியை மேற்கொள்ள தொடங்கினர். சாரல் மழை பெய்ய தொடங்கிய போது, விராட் கோலி, கேஎல் ராகுல் உள்ளிட்டோர் குடை பிடித்தபடி மைதானத்திற்கு வந்தனர்.
ஆனால் மீண்டும் கனமழை தொடங்கியதால், ஆட்டம் நடக்குமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்தது. அதேபோல் தேநீர் இடைவேளையின் போது நடுவர்கள் களத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். அதேபோல் மைதான ஊழியர்களுடன் ஆலோசனை நடத்திய போது, மழை நின்றாலும் பிட்சை தயார் செய்வதற்கு ஒன்றரை மணி நேரம் பிடிக்கும் என்று தெரிய வந்தது.
ஏனென்றால் தார்பாய்-க்கு அடியில் சுமார் 2 நாட்கள் பிட்ச் இருந்திருப்பதால், ஒன்றரை மணி நேரம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன்பின் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தை ரத்து செய்வதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் டாஸ் கூட போடப்படாமல் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் 2வது நாள் ஆட்டத்திற்கான நேரத்தை நடுவர்கள் மாற்றி அமைத்துள்ளனர். 2வது நாள் ஆட்டத்தின் காலை செஷன் 9.15 மணிக்கு தொடங்கி, 11.30 வரை நடக்கும் என்றும், பின்னர் உணவு இடைவேளை 40 நிமிடங்கள் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2வது செஷன் 12.10 மணிக்கு தொடங்கி மதியம் 2.25 மணி வரை நடக்கும் என்றும், மாலை செஷன் 2.45 மணிக்கு தொடங்கி மாலை 4.45 மணி வரை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.