தரம்சாலா: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, திடீரென மூடுபனி சூழ்ந்ததால் ஆட்டம் சில நிமிடங்கள் தடைபட்டது.
உலகக்கோப்பை தொடரில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தரம்சாலா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 273 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. சிறப்பாக ஆடிய டேரில் மிட்செல் 130 ரன்கள் சேர்த்தார்.

இந்திய அணி தரப்பில் நட்சத்திர பவுலர் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனைத் தொடர்ந்து இந்திய அணி 274 ரன்கள் இலக்கை நோக்கி சேஸிங்கை தொடங்கியது. இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா - சுப்மன் கில் இருவரும் தொடக்கம் கொடுத்தனர். இந்திய அணியின் ரோகித் சர்மா பவுண்டரி அடித்து ரன் கணக்கை தொடங்கினார்.
தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 46 ரன்களும், சுப்மன் கில் 26 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 76 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தடுமாறி வந்தது. இதன்பின் விராட் கோலி - ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி பேட்டிங்கை தொடர்ந்தது. இந்த நிலையில் 14.2 ஓவர்களின் போது இந்திய அணி 84 ரன்களுடன் விளையாடிய போது, திடீரென மைதானத்தில் பனி சூழ்ந்தது.
மைதான விளக்குகள், ரசிகர்கள் அமரும் கேலரிகளில் கூட பனி சூழ்ந்தது. இதனால் சில நிமிடங்கள் ஆட்டம் நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இதன்பின் ஸ்ரேயாஸ் ஐயர் அடுத்தடுத்து 3 பவுண்டரிகளை விளாசினார். அதனை தடுக்க முடியாமல் நியூசிலாந்து ஃபீல்டர்கள் திணறினர். இதற்கு பனிப்பொழிவும் முக்கிய காரணமாக அமைந்தது. இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில், அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் பனி அதிகமாக சூழ்ந்தது.
இந்திய அணி 15.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 100 ரன்கள் சேர்த்திருந்தது. அப்போது பனிப்பொழிவு காரணமாக ஆட்டம் மீண்டும் நிறுத்தப்பட்டது. மைதானத்தில் ஃபீல்டர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை கூட பார்க்க முடியாத அளவிற்கு பனிப்பொழிவு அதிகரித்தது. இதனால் இரு அணி வீரர்களும் மைதானத்தில் இருந்து ஓய்வறைக்கு திரும்பினர். இதன்பின்னர் சுமார் 15 நிமிடங்களுக்கு பின் ஆட்டம் மீண்டும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.