பெங்களூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 2 முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் தொடங்கியுள்ளது. நேற்று காலை முதலே கனமழை தொடர்ந்து பெய்ததால், முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக 2வது நாளில் 9.15 மணிக்கே போட்டி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இன்று காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழை இல்லாததால், திட்டமிட்டபடி டாஸ் போடப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக மழை பெய்தாலும், சின்னச்சாமி மைதானத்தில் சிறந்த வடிகால் அமைப்புகள் செய்யப்பட்டுள்ளதால், எந்த சிக்கலும் இல்லை. ஆனால் 2 நாட்களுக்கு மேலாக பிட்ச் மூடப்பட்டுள்ளதால், பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிற்கும் சரிசமமாக சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் டாஸ் வென்றால், பேட்டிங் செய்வதே சரியான தேர்வாக இருக்கும் என்று வர்ணனையாளர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் செய்வதாக அறிவித்தார். தொடர்ந்து ரோஹித் சர்மா பேசுகையில், இந்த பிட்ச் 2 நாட்களுக்கும் மேலாக தார்பாயால் மூடப்பட்டிருக்கிறது. அதனால் தொடக்கத்தில் இந்த பிட்சில் பந்து நின்று வரும் என்று நினைக்கிறோம். அதுதான் ஒவ்வொரு பிட்சிலும் இயற்கையாகவே நடக்கும்.
முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டாலும், இந்தப் போட்டியில் முடிவு கொண்டு வரப்பட வேண்டும் என்று நினைக்கிறோம். ஒரு அணியாக என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து வைத்திருக்கிறோம். கடந்த சில டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். இந்தப் போட்டியில் இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சுப்மன் கில்லுக்கு பதிலாக சர்ஃபராஸ் கான் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதேபோல் ஆகாஷ் தீப்-க்கு பதிலாக குல்தீப் யாதவ் களமிறங்குவார் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் பேசுகையில், இரு நாட்களாக பிட்ச் மூடப்பட்டிருப்பதால், பவுலிங்கிற்கும் உதவியாக இருக்கும் என்று கருதுகிறேன். வானமும் கொஞ்சம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். மழையால் எங்களுக்கு பெரியளவில் பயிற்சிய் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தப் போட்டியில் 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் 2 ஸ்பின்னர்கள் களமிறங்குவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணி பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்ஃபராஸ் கான், விராட் கோலி, ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
நியூசிலாந்து அணி பிளேயின் லெவன்: டாம் லேதம், டெவான் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டெரல் மிட்சல், டாம் பிளெண்டல், கிளென் பிலிப்ஸ், மேட் ஹென்ரி, டிம் சவுதி, அஜாஸ் படேல், வில்லியம் ஓரோர்க்