மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமாக பேட்டிங் ஆடியது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணிக்கு 147 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதை நோக்கி ஆடிய இந்திய அணி மிக மோசமாக விக்கெட்களை இழந்து வந்தது.
ஆனால், இந்திய வீரர்கள் மூன்றாம் நாள் ஆட்டத்திற்கு முன்பு நியூசிலாந்து அணியின் இடது கை ஸ்பின்னர் அஜாஸ் பட்டேல் பந்துவீச்சில் அவுட் ஆகி விடுவோமோ? என்ற அச்சத்தில் நீண்ட நேரம் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அஜாஸ் பட்டேல் முதல் இன்னிங்க்ஸில் 5 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

அவர் இடது கை ஸ்பின்னர் என்பதால் ஐந்து உள்ளூர் இடது கை ஸ்பின்னர்களை அழைத்து வந்து இந்திய வீரர்கள் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். குறிப்பாக விராட் கோலி நீண்ட நேரம் இடது கை ஸ்பின்னர்களை வலைப் பயிற்சியில் சந்தித்ததாகவும் தெரிய வந்தது.
ஆனால், ரிஷப் பண்ட்டை தவிர அனைத்து வீரர்களும் மிக மோசமாக சுழற் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் சிக்கினார்கள். ரோஹித் சர்மா மட்டும் வேகப்பந்துவீச்சாளர் மாட் ஹென்றி பந்துவீச்சில் ஆட்டம் இழந்து இருந்தார். ஜெய்ஸ்வால் கிளென் பிலிப்ஸ் பந்துவீச்சில் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்து இருந்தார்.
சுப்மன் கில், விராட் கோலி, சர்ஃபராஸ் கான், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அஜாஸ் பட்டேல் பந்துவீச்சில் ஒற்றை இலக்கத்தில் ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். ரிஷப் பண்ட் 64 ரன்கள் எடுத்த நிலையில் அஜாஸ் பட்டேல் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.
அஜாஸ் பட்டேல் இரண்டாவது இன்னிங்ஸிலும் ஐந்து விக்கெட் வீழ்த்தி இந்திய அணியை சிக்கலில் ஆழ்த்தினார். அவர் ஒருவருக்காக இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சொந்த மண்ணிலேயே பயந்து போய் வலைப் பயிற்சியில் ஈடுபட்டது ரசிகர்களை அதிர்ச்சி ஆழ்த்தி இருக்கிறது. அப்படி வலைப் பயிற்சி செய்தும் வரிசையாக அஜாஸ் பட்டேலிடம் தங்கள் விக்கெட்களை இந்திய வீரர்கள் இழந்தது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.