தரம்சாலா: உலகக்கோப்பை தொடரில் அதிக சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர்களில் கேப்டன் ரோகித் சர்மா முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 273 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டாகியது. நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் டேரில் மிட்செல் 130 ரன்கள் சேர்த்து அசத்தினார். இந்திய அணி தரப்பில் நட்சத்திர வீரர் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 274 ரன்கள் சேஸிங்கை இந்திய அணி தொடங்கியது. இந்திய அணி தரப்பில் கேப்டன் ரோகித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. வழக்கம் போல் முதல் ஓவரில் பவுண்டரி அடித்து ரோகித் சர்மா ரன் கணக்கை தொடங்கினார். போல்ட் ஓவரில் ரோகித் சர்மா திணறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சர் என்று பொளந்து கட்டினார்.
அவரைத் தொடர்ந்து வந்த மேட் ஹென்ரி பந்திலும் சிக்சர்களை விளாசினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இதனால் அரைசதம் விளாசுவார் என்று ஆர்வமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 40 பந்துகளில் 4 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஃபெர்குசன் வீசிய பந்தில் இன்சைட் எட்ஜாகி ரோகித் சர்மா போல்டாகி ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
46 ரன்களில் ஆட்டமிழந்தாலும் ரோகித் சர்மா தரமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். சிக்சர் அடிப்பதில் வல்லவரான ரோகித் சர்மா சில வாரங்களுக்கு முன், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் விளாசிய கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்தார். தற்போது உலகக்கோப்பை தொடரில் அதிக சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அதேபோல் உலகக்கோப்பை தொடரில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ஏபி டி வில்லியர்ஸ் சாதனையை தகர்த்து 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதுவரை 22 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 40 சிக்சர்களை விளாசி இருக்கிறார். இவருக்கும் முன் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் 35 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடி 49 சிக்சர்களை விளாசி முதலிடத்தில் உள்ளார்.