துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தனது போட்டிகள் அனைத்தையும் துபாயில் மட்டுமே ஆடுவது இந்திய அணிக்கு சாதகமான விஷயம் எனவும், மற்ற அணிகளுக்கு ஒரு விதியும், இந்தியாவுக்கு தனி விதியும் இருப்பதாக முன்னாள் வீரர்களும், மற்ற அணி வீரர்களும் புகார் கூறி வருகின்றனர்.
ஆனால், இந்திய அணி பாகிஸ்தானுக்கு பயணம் செல்லாததால் தான் இந்த நிலை எனக் கூறப்பட்டாலும், ஒருவேளை இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று இருந்தாலும் இதே நிலைதான் ஏற்பட்டிருக்கும் என தற்போது விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஏனெனில், பாகிஸ்தானுக்கு இந்திய அணி பயணம் செய்திருந்தால், நிச்சயமாக பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி ஆடும் போட்டிகள் அனைத்தும் ஒரே மைதானத்தில் தான் நடத்தப்பட்டிருக்கும்.

அப்போது, பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு பிசிசிஐயுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது, லாகூரில் இந்திய அணி ஆடும் போட்டிகள் அனைத்தையும் நடத்தலாம் எனவும், இந்திய அணி வீரர்களை ஒரே ஹோட்டலில் தங்க வைத்து, அவர்களை அங்கு மட்டுமே பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறோம் எனவும் கூறியிருந்தது.
அப்படி இல்லை என்றாலும், லாகூரில் போட்டி முடிந்தவுடன் இந்திய வீரர்கள் அருகில் இருக்கும் இந்திய நகரமான சண்டிகருக்கு பயணம் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு போட்டி முடிந்தவுடன் இந்திய வீரர்கள் இந்தியாவிற்கு சென்று விடலாம் எனவும் யோசனை கூறியிருந்தது. ஆனால், அதை பிசிசிஐ ஏற்க மறுத்துவிட்டது.
ஒருவேளை, அந்த யோசனையை பிசிசிஐ ஏற்று இருந்தால், அப்போதும் இந்திய அணி தனது சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் அனைத்தையும் ஒரே மைதானமான லாகூரில் தான் விளையாடி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பதிலாக, தற்போது துபாயில் இந்திய அணி தனது போட்டிகள் அனைத்தையும் விளையாடி வருகிறது.
எனவே, இங்கு இந்திய அணி தனது போட்டிகள் அனைத்தையும் ஒரே மைதானத்தில் விளையாடுவதற்கு முக்கிய காரணம் பாகிஸ்தானில் பாதுகாப்பு இல்லை என்பதுதான். ஒருவேளை, ஐக்கிய அரபு அமீரகத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் இந்தியா ஆடும் போட்டிகளை நடத்தலாம். ஆனால், அதற்கான செலவு மிகவும் அதிகரிக்கும்.
பாகிஸ்தானில் நடத்தாமல் இந்தியா ஆடும் போட்டிகளை மட்டும் துபாயில் நடத்துவதால் பொருட்செலவு அதிகரித்து உள்ளது. அதை ஓரளவு ஈடுகட்டவே ஒரே மைதானத்தில் இந்தியாவின் போட்டிகள் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. துபாய் மட்டுமல்லாது ஷார்ஜா, அபுதாபி போன்ற நகரங்களிலும் இந்தியா ஆடும் போட்டிகளை நடத்தினால் அதற்கான செலவு அதிகரிக்கும்.
துபாய் மைதானத்தில் தான் அனைத்து போட்டிகளையும் ஆடப் போகிறோம் என்பதை அறிந்து, அந்த மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் இந்திய அணி ஐந்து சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்திருப்பதையும் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். இதே போன்ற வாய்ப்பு மற்ற அணிகளுக்கு கிடைத்தால், அவர்களும் ஒரே மைதானத்தில் விளையாடுவதை முன்பே அறிந்து அதற்கேற்ற வகையில் அணி தேர்வு செய்திருக்க முடியும். அது அவர்களுக்கு சாதகமாக இருக்கும் எனவும் கூறுகின்றனர்.
மேலும், ஒரே மைதானத்தில் விளையாடுவதால் அந்த மைதானத்தில் எப்படி பவுலிங் செய்ய வேண்டும், எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் போன்ற அனைத்து விவரங்களும் நன்கு அறிந்திருப்பார்கள். குறிப்பாக, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் அந்த அனுபவம் ஒரே மைதானத்தில் ஆடும் அணிக்கு மிகப்பெரிய சாதகமாக இருக்கும் என்பதையும் சுட்டிக்காட்டி புகார் சொல்லி வருகின்றனர். ஆனால், இந்த நிலையை உருவாக்கியது பாகிஸ்தான் தான்.