மும்பை: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில், காயமடைந்த வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக இளம் வீரர் ஆயுஷ் பதோனியை அணியில் சேர்த்தது குறித்து முன்னாள் வீரர் இர்பான் பதான் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். "இந்தத் தேர்வில் எனக்குத் துளி கூட உடன்பாடில்லை" என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் முடிவை அவர் பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.
ஜனவரி 18 அன்று இந்தூரில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ள நிலையில், பதானின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

வாஷிங்டன் சுந்தருக்கு விலா எலும்புப் பகுதியில் காயம் ஏற்பட்டதால் அவர் தொடரிலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக அனுபவ வீரர் அக்சர் படேலைத் தேர்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாருமே எதிர்பாராத வகையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் இளம் வீரர் ஆயுஷ் பதோனி அணியில் சேர்க்கப்பட்டார். "எங்களுக்குக் கூடுதலாகப் பந்துவீசக்கூடிய ஒரு வீரர் தேவை" என்று இதற்கு பேட்டிங் கோச் சிதான்ஷு கோடக் விளக்கமும் அளித்திருந்தார்.
இந்த முடிவு குறித்துத் தனது யூடியூப் சேனலில் பேசிய இர்பான் பதான், தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். "உண்மையைச் சொல்லப்போனால், இந்த முடிவு எனக்குச் சுத்தமாக புரியவில்லை. இது எந்த லாஜிக்குமே இல்லாத ஒரு தேர்வாகத் தெரிகிறது. ஆயுஷ் பதோனி அணியில் சேர்க்கப்பட்ட செய்தி வந்ததும், நான் போய் அவருடைய சமீபத்திய ஸ்கோர்களை எடுத்துப் பார்த்தேன்.
விஜய் ஹசாரே ட்ராபியில் அவர் அப்படி ஒன்றும் பிரமாதமாகச் செயல்படவில்லை. உள்ளூர் கிரிக்கெட்டில் அதிரடி காட்டித் தீயாக விளையாடியிருந்தால் பரவாயில்லை. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லையே?" என்று பதான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "பதோனி நல்ல திறமையான வீரர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அவர் இந்திய அணியில் ஆடும் அளவிற்கு இப்போது தயாராகிவிட்டாரா என்றால், எனக்குச் சந்தேகமாகத் தான் இருக்கிறது. அவர் விஜய் ஹசாரே தொடரில் 3 போட்டிகளில் பந்துவீசி 4 விக்கெட்டுகளை எடுத்தார் என்பதற்காக, அவரை ஆல்ரவுண்டராகக் கருதி அணியில் எடுத்திருக்கலாம். ஆனால், இது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம் தான்" என்று கூறியுள்ளார்.
பதான் சொல்வது போல, ஆயுஷ் பதோனியின் லிஸ்ட்-ஏ ரெக்கார்ட் சராசரியாகவே உள்ளது. 36.47 சராசரியுடன் 693 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஒரே ஒரு சதம் மட்டுமே அடித்துள்ளார். ராஜ்கோட்டில் நடந்த 2-வது போட்டியில் பதோனிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்குப் பதில் நிதிஷ் குமார் ரெட்டி தான் ஆடினார்.
இந்தூரில் நடக்கும் வாழ்வா-சாவா ஆட்டத்தில், கம்பீர் தனது முடிவை நியாயப்படுத்த பதோனிக்கு அறிமுக வாய்ப்பை வழங்குவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.