மும்பை: டி20 உலககோப்பைக்கு முன் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ராவின் மோசமான பந்துவீச்சில் ஒரு மறைமுக நன்மை இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ரஹானே எதெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 271 ரன்கள் குவித்தது.
இமாலய இலக்கை துரத்திய நியூசிலாந்து, அணி 225 ரன்கள் எடுத்தது. இப்போட்டியில், பும்ரா தனது நான்கு ஓவர்களில் விக்கெட் இன்றி 58 ரன்களை வாரி வழங்கினார். இருப்பினும், 2026 டி20 உலகக் கோப்பைக்கு பும்ராவின் இச்செயல்பாடு கவலை இல்லை என ரஹானே தெரிவித்தார்.

இது குறித்து பேசிய அவர், , " ரன் குவிப்புக்கு சாதகமான பிட்ச்சில் இது சகஜம். நியூசிலாந்து பேட்டர்களை பாராட்ட வேண்டும், அவர்கள் நன்றாக விளையாடினர். உலகக் கோப்பையில் நடக்காமல், இந்த ஆட்டத்தில் நடந்தது மகிழ்ச்சி. பும்ரா எவ்வளவு திறமைசாலி என்பதை நாங்கள் அறிவோம், அதனால் கவலை இல்லை," என்று ரஹானே கூறினார்.
அர்ஷ்தீப் பற்றி பேசிய ரஹானே, "ஐந்து விக்கெட்டுகள் எடுப்பது டி20யில் ஆச்சரியம். இடது கை பந்துவீச்சாளராக உலகக் கோப்பையில் அவர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியம். இன்று விக்கெட் பட்டியலில் அவர் இடம்பெற்றது முக்கியம். அவர் சிறப்பாக பந்துவீசினார். விக்கெட் பட்டியலில் இடம் பெறுவது பந்துவீச்சாளருக்கு நம்பிக்கை அளிக்கும். பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால் ரன்கள் விட்டுக் கொடுத்தாலும், அக்சர் போல அர்ஷ்தீப்பும் தாக்கினார்."
முதல் இரண்டு ஓவர்களில் 40 ரன்கள் விட்டுக் கொடுத்த அவர், தனது நான்கு ஓவர்களில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி 51 ரன்கள் மட்டும் கொடுத்தார். ரஹானே, நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அக்சர் படேலின் ஆட்டத்தை மாற்றிய பந்துவீச்சையும் பாராட்டினார். காயத்திலிருந்து மீண்ட அக்சர், நான்கு ஓவர்களில் 33 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
"அவர் ஃபின் ஆலன் விக்கெட்டை வீழ்த்தினார். பந்துவீசியதும், சரியான லென்த் மற்றும் க்ரீஸைப் பயன்படுத்தியதும் அருமை. பந்தை மெதுவாக வீசி துணிச்சலுடன் பந்துவீசினார். அவர் விக்கெட்டுகளை எடுக்கவே முனைந்தார், பாதுகாக்கவில்லை. மொத்த ஸ்கோர் 272 ஆக இருந்தாலும், விக்கெட்டுகளை எடுக்கும் பழக்கம் முக்கியம்," என்றும் ரஹானே வலியுறுத்தினார்.
"எந்த நேரத்திலும் விக்கெட்டுகளை எடுப்பது சிறந்த மனநிலை. சான்ட்னர் தடுப்பாட்டம் ஆடினார், ஆனால் அக்சர் தொடர்ந்து தாக்கினார், விக்கெட்டுகளை மட்டுமே எதிர்பார்த்தார்," என்று ரஹானே தெரிவித்தார். அக்சர், நிலைத்து ஆடிய ஃபின் ஆலனை (80 ரன்கள்) மற்றும் ஃபார்மில் இருந்த கிளென் பிலிப்ஸை (7 ரன்கள்) அவுட் செய்தார். டி20 உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிராக 4-1 என்ற அபார தொடர் வெற்றியைப் பெற அவரது பந்துவீச்சு உதவியது.