மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு அளித்த ஓய்வு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து பேசிய பும்ரா அண்மைக் காலத்தில் ஒருநாள் தொடர்களிலோ அல்லது உள்ளூர் போட்டிகளிலோ அதிகம் விளையாடாததால், இந்த ஓய்வு அர்த்தமற்றது என்று குறிப்பிட்டார்.
பும்ராவின் பணிச்சுமையை பிசிசிஐ மிகவும் கவனமாக நிர்வகித்து வருகிறது. இதனால் அவருக்குப் பதிலாக ஹர்ஷித் ரானா சேர்க்கப்பட்டார். ஒரு யூடியூப் வீடியோவில் கைஃப் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். "ஓய்வு எதற்கு? என்ன பணிச்சுமை? அவர் இப்போதுதான் நிறைய போட்டிகளில் விளையாடிவிட்டு வந்தாரா என்ன? அவர் ஏற்கெனவே நல்ல ஓய்வுக்குப் பிறகுதான் வந்துள்ளார். இல்லை, இல்லை, இது எனக்குச் சுத்தமாகப் புரியவில்லை," என கைஃப் கேள்வி எழுப்பினார்.

"நீங்கள் ஓய்வு அளிக்க விரும்பினால், அர்ஷ்தீப் சிங்குக்கு ஓய்வு கொடுங்கள். ஹர்ஷித் ரானாவை அணியில் சேர்க்க விரும்பினால், அக்சர் பட்டேல் காயமடைந்து எட்டாவது வரிசையில் பேட்டிங் தேவைப்பட்டால், அர்ஷ்தீப்புக்கு ஓய்வு கொடுத்து பும்ராவைச் சேர்க்கலாம். அதாவது, நாம் ஏன் இங்கே ஒப்பிடுகிறோம்? போட்டி என்ற கேள்வியே இல்லை," என்று தெளிவுபடுத்தினார்.
"பும்ராவை அணியின் கலவைக்காக நீக்கினால், அது தவறு. எந்த சக்தியாலும் பும்ராவை அணியில் இருந்து நீக்க முடியாது. அணி கலவையைச் சரிசெய்யும், ஆனால் பும்ரா அணியில் விளையாடுவார். ஜஸ்பிரித் பும்ரா போன்ற ஒரு பந்துவீச்சாளரை ஒரு போட்டிக்குப் பிறகு ஓய்வெடுக்க விட முடியாது. அவர் அதிகம் விளையாடுவதே இல்லை. அவர் ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை. அவர் ஏற்கெனவே ஓய்வெடுத்துத்தான் திரும்பியுள்ளார். அவர் உள்ளூர் போட்டிகளிலும் அதிகம் விளையாடுவதில்லை."
"சிராஜ், மறுபுறம், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உள்ளூர் போட்டிகளில் விளையாடுகிறார். அவர் ரஞ்சி, விஜய் ஹஸாரே போட்டிகளில் விளையாடுகிறார். பும்ரா முழுமையாக ஓய்வெடுத்துத்தான் வந்துள்ளார்," என்று கையிப் கூறியுள்ளார். இந்தியா, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. மூன்றாவது டி20 போட்டி ஞாயிற்றுக்கிழமை கவுகாத்தியில் நடைபெற உள்ளது.