மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 0 - 3 என இழந்து இருக்கிறது. இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட இந்திய அணி வெற்றி பெறவில்லை. குறிப்பாக இந்திய அணியின் கேப்டனும், மூத்த வீரருமான ரோஹித் சர்மா மற்றும் முன்னாள் கேப்டனும், மூத்த வீரருமான விராட் கோலி ஆகிய இருவரும் மிக மோசமாக விளையாடினர்.
இந்த தொடரில் 6 இன்னிங்க்ஸ்களில் பேட்டிங் செய்த ரோஹித் சர்மா 91 ரன்களும், விராட் கோலி 93 ரன்களும் மட்டுமே எடுத்திருந்தனர். இதை அடுத்து இவர்கள் இருவரையும் அணியை விட்டு நீக்க வேண்டும் என்ற விமர்சனம் எழுந்து இருக்கிறது. இதற்கிடையே இந்திய அணி வரும் நவம்பர் 12 அன்று ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது.

அந்த தொடரின் போது இந்திய அணியின் கேப்டனாக பும்ராவை நியமிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்து உள்ளன. இந்திய மண்ணில் இதுவரை இந்திய அணி மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட டெஸ்ட் தொடர்களில் அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்ததே இல்லை. ஆனால், முதல்முறையாக சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்து இருக்கிறது.
ரோஹித் சர்மாவின் மோசமான கேப்டன்சியும் இந்த தோல்விக்கு முக்கிய காரணம் என்பதால் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ஆக இருக்கும் பும்ராவை டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர். ரோஹித் சர்மாவுக்கு ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ஓய்வு அளிக்க வேண்டும் எனவும் சிலர் கூறி வருகின்றனர்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரன் அல்லது ருதுராஜ் கெய்க்வாட்டை துவக்க வீரராக ஆட வைக்க வேண்டும் எனவும் சிலர் சுட்டிக்காட்டி உள்ளனர். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் ரோஹித் சர்மாவின் கடைசி டெஸ்ட் தொடராக இருக்கவும் வாய்ப்பு உள்ளது.
இந்திய அணி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறாமல் போனால் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வாய்ப்பு உள்ளது. அதற்கு முன்னதாகவே கேப்டன்சியை பும்ரா வசம் ஒப்படைப்பது நல்ல முடிவாக இருக்கும்.