புனே: இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து நியூசிலாந்து அணியின் முன்னணி நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்திய அணியின் ரிஷப் பண்ட் காலில் காயமடைந்த நிலையில், அவர் மீண்டும் ஃபிட்னஸ் உடன் இருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. இதனால் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதுடன், டெஸ்ட் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் தயாராகி வருகிறது.

இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பாகவே நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப வில்லியம்சன் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. மாறாக நியூசிலாந்திலேயே தங்கி காயத்திற்கு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்தார்.
இருந்தாலும் 2வது டெஸ்ட் போட்டியில் வில்லியம்சன் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்று நியூசிலாந்து அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் புனே மைதானத்தில் நாளை மறுநாள் தொடங்கவுள்ள 2வது டெஸ்ட் போட்டியில் நட்சத்திர வீரர் வில்லியம்சன் பங்கேற்க மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.
அதேபோல் பெங்களூர் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் காலில் காயம் ஏற்பட்டது. சமீபத்தில் விபத்தில் சிக்கி முழங்காலில் அறுவை சிகிச்சை செய்த அதே இடத்தில் பந்து அடித்ததால், ரிஷப் பண்ட் உடனடியாக களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவருக்கு பதிலாக துருவ் ஜுரெல் மாற்று விக்கெட் கீப்பராக செயல்பட்டார்.
இருந்தாலும் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்வதில் எந்த சிக்கலும் வரவில்லை. ஆனால் முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்த பின் உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதன்பின் வழக்கம் போல் ரிஷப் பண்ட் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் ரிஷப் பண்ட் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில் எந்த சிக்கலும் இருக்காது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் இந்திய ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர். ஏனென்றால் இந்திய டெஸ்ட் அணியில் ரிஷப் பண்ட், சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகிய 3 பேட்ஸ்மேன்கள் மட்டுமே கன்சிஸ்டன்சியுடன் ரன்கள் சேர்த்து வருகின்றனர். அதில் ரிஷப் பண்ட் காயமடைந்து வெளியேறினால், இளம் வீரரான துருவ் ஜுரெல் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுவார்.
அவர் சிறந்த வீரர் என்றாலும், முதல் போட்டியிலேயே தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்பது சந்தேகம் தான். ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்துள்ள இந்திய அணி, சில வீரர்களை காயம் காரணமாக இழக்க நேரிட்டால் கூடுதல் சிக்கல் ஏற்படும். இதனால் ரிஷப் பண்ட் முழு ஃபிட்னஸ் உடன் இருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.