தரம்சாலா: இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் காயத்திற்கு பின் விளையாடியுள்ள 9 ஒருநாள் போட்டிகளில் ஒரு சதம், 3 அரைசதம் உட்பட 455 ரன்கள் குவித்ததோடு, 5 போட்டிகளில் நாட் அவுட் பேட்ஸ்மேனாக கடைசி வரை களத்தில் இருந்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மிடில் ஆர்டரின் முதுகெலும்பாக மாறியுள்ளார் கேஎல் ராகுல். ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட காயத்திற்கு பின் நேரடியாக ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடருக்காக தேர்வு செய்யப்பட்டார். இதனால் காயமடைந்து ஓய்வில் இருந்த வீரர்களை நேரடியாக வாய்ப்பு கொடுத்து விளையாட வைப்பது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று பார்க்கப்பட்டது.

ஆனால் கம்பேக் கொடுத்த முதல் போட்டியிலேயே சதம் விளாசி கேஎல் ராகுல் அசத்தினார். அதன்பின்னர் மொத்தமாக 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கேஎல் ராகுல் 113.75 சராசரியுடன் 455 ரன்களை குவித்துள்ளார். அதில் ஒரு சதம் மற்றும் 3 அரைசதங்களும் அடங்கும். குறிப்பாக 9 ஒருநாள் போட்டிகளில் 5 போட்டிகள் கடைசி வரை நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருப்பது தான் மிரள வைத்துள்ளது.
இந்திய அணியின் மிடில் ஆர்டரை தனியாளாக சுமந்து வருகிறார் கேஎல் ராகுல். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்த போது, கொஞ்சம் கூட சலனமே இல்லாமல் சம்பவத்தை செய்தார் கேஎல் ராகுல். அதுமட்டுமல்லாமல் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் 3 இன்னிங்ஸ்களில் சேர்த்து 150 ரன்களை குவித்துள்ளார்.
அதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், 3 போட்டிகளில் கடைசி வரை கேஎல் ராகுல் நாக் அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் இருந்தது தான். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் நம்பர் 4 வீரராக 11 இன்னிங்ஸ்களில் களமிறங்கியுள்ள கேஎல் ராகுல், 481 ரன்களை குவித்துள்ளார். அதேபோல் நம்பர் 5 வீரராக 23 இன்னிங்ஸ்களில் விளையாடி 957 ரன்களை குவித்துள்ளார்.
மொத்தமாக மிடில் ஆர்டர் வீரராக மட்டும் 34 போட்டிகளில் 1,438 ரன்களை குவித்துள்ளார். அதேபோல் விக்கெட் கீப்பிங்கிலும் குல்தீப் யாதவிற்கு ஆலோசனை கொடுப்பது, ஜடேஜாவின் சுழலை கணித்து பந்தை பிடிப்பது என்று முதிர்ச்சியடைந்த வீரராக மாறியுள்ளார் கேஎல் ராகுல். கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பதற்றம் நிறைந்த கேஎல் ராகுலை கம்பேக்கிற்கு பின் ஒருமுறை கூட ரசிகர்களால் பார்க்க முடியவில்லை. இதுதான் அவரை கூடுதல் அபாயகரமான வீரராக மாற்றியுள்ளதாக பார்க்கப்படுகிறது.