அவர் கை விட்டாலும் நான் விடமாட்டேன்.. சாதனை சதம்.. மீண்டும் தெறிக்கவிட்ட இந்திய வீரர்!
Recommended Video
மவுன்ட் மவுங்கனி : மூன்றாவது ஒருநாள் போட்டியில் கேப்டன் கோலி சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
ஆனால், கடந்த சில மாதங்களாக உச்சகட்ட பார்மில் இருக்கும் ராகுல், மீண்டும் சிறப்பாக ரன் குவித்தார்.
மேலும், நீண்ட காலம் கழித்து சதம் அடித்து அசத்தினார். இந்த சதம் மூலம் சாதனையும் செய்துள்ளார் ராகுல்.

மூன்றாம் ஒருநாள் போட்டி
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே ஆன மூன்றாவது ஒருநாள் போட்டி நியூசிலாந்து மண்ணில் நடைபெற்றது. முன்னதாக இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து, தொடரை இழந்த நிலையில், இந்திய அணி இந்தப் போட்டியில் ஆறுதல் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் களமிறங்கியது.

இந்தியா பேட்டிங்
மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணிக்கு மீண்டும் மோசமான துவக்கம் அளித்தார் மயங்க் அகர்வால். அவர் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

கோலி அதிர்ச்சி
அடுத்து வந்த கேப்டன் கோலி சிக்ஸ் அடித்து உற்சாகம் அளித்தார். எனினும், 9 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ஆட்டமிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஸ்ரேயாஸ் ஐயர் நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆடி 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கை கொடுத்த ராகுல்
ஸ்ரேயாஸ் ஐயர் - ராகுல் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தனர். அடுத்து ராகுல், மனிஷ் பாண்டே ஜோடி சேர்ந்து அணியை மீட்டனர். மனிஷ் பாண்டே 42 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

சதம் விளாசல்
ராகுல் அதிரடியாக ஆடி 9 ஃபோர், 2 சிக்ஸர் அடித்து, சதம் விளாசி அசத்தினார். 113 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது ராகுலின் நான்காவது ஒருநாள் போட்டி சதம் ஆகும். 2020இல் இது அவரின் முதல் சதம் ஆகும்.

கடைசி சதம் எப்போது?
கடந்த டிசம்பர் 2019ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் சதம் அடித்து இருந்தார் ராகுல். அதன் பின் நடந்த ஆஸ்திரேலிய தொடரில் ஒரு போட்டியில் 88 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்தப் போட்டியில் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்ட அவர், இந்த முறை சதம் விளாசி உள்ளார்.

நியூசிலாந்தில் சாதனை
நியூசிலாந்து மண்ணில் சதம் அடித்த ராகுல், முக்கிய சாதனை ஒன்றையும் செய்துள்ளார். ஐந்தாம் வரிசை மற்றும் அதற்கும் கீழே பேட்டிங் செய்து நியூசிலாந்து மண்ணில், நியூசிலாந்து அணிக்கு எதிராக சதம் அடிக்கும் முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை செய்துள்ளார்.

சுரேஷ் ரெய்னா அடித்த சதம்
இதற்கு முன்னதாக நியூசிலாந்து மண்ணில் சுரேஷ் ரெய்னா ஐந்தாம் வரிசையில் பேட்டிங் செய்து சதம் அடித்துள்ளார். அவர் 2015 உலகக்கோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சதம் அடித்து இருந்தார். அந்த வரிசையில், நியூசிலாந்து மண்ணில் ஐந்தாம் வரிசைக்கும் கீழே பேட்டிங் இறங்கி சதம் அடித்த இரண்டாவது வீரர் ஆனார் ராகுல்.

நம்பிக்கை பேட்ஸ்மேன்
இந்திய அணியில் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கும் வீரராக விராட் கோலி இருந்து வரும் நிலையில், அவருக்கு அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக ராகுல் உருவாகி வருகிறார். நியூசிலாந்து ஒருநாள் தொடரில் கோலியின் சராசரி 25 மட்டுமே. எனினும், ராகுல் 204 ரன்கள் குவித்து 102 ரன்கள் சராசரி வைத்துள்ளார்.

இந்தியா ஸ்கோர்
இந்திய அணி மூன்றாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 296 ரன்கள் குவித்தது. ராகுல் 112 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 62, மனிஷ் பாண்டே 42 ரன்களும் எடுத்து இருந்தனர். நியூசிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 297 ரன்கள் நிர்ணயித்தது இந்திய அணி.


Click it and Unblock the Notifications