மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 301 ரன்கள் என்ற வெற்றி இலக்கை ஆறு விக்கெட்டுகளை இழந்து எட்டியது. ஒரு கட்டத்தில் இந்திய அணி எளிதாக வென்றுவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், விராட் கோலி ஆட்டம் இழந்தவுடன் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
எனினும் ராகுல் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் கடைசி நான்கு, ஐந்து ஓவர்களில் எனக்கு நெருக்கடி ஏற்பட்டதாக நான் நினைக்கவில்லை.

காரணம் ஹர்ஷித் ராணா அபாரமாக பேட்டிங் செய்து ரன்களை சேர்த்தார். இதன் மூலம், என் மீது இருந்த அழுத்தம் குறைந்தது. அவர் பந்துகளை அடித்த விதத்தை பார்த்தவுடன் எனக்கு சேஸிங் கொஞ்சம் எளிதாக மாறியதாக தோன்றியது. இதன் காரணமாக நான் கடைசி வரை அமைதியாகவே இருந்தேன்.
ஏனென்றால் நாங்கள் மிகப்பெரிய இலக்கை ஒன்றும் அந்தக் கட்டத்தில் துரத்தவில்லை. 6,7 ஓவர்கள் இருந்தது. இதனால் பெரிதாக வெற்றி பெற்று விடலாம் என்று நினைத்தேன். இதுபோன்ற இலக்கை பத்தில் ஒன்பது முறை நீங்கள் வெற்றிகரமாக எட்டி விடுவீர்கள். வாஷிங்டன் சுந்தரால் ரன் ஓட முடியாது என்று எனக்கு முன்பே தெரியும். அவர் முதல் இன்னிங்சிலே காயமடைந்தார்.
ஆனால் இவ்வளவு பெரிய காயமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அவர் களத்திற்கு வந்தபோது தேவையான ரன்களுக்கு ஏற்ற பந்துகள் தான் இருந்தது. இந்த ஆடுகளத்தில் பந்து புதியதாக இருக்கும்போது, பேட்டிங் செய்வது சுலபமாக இருந்தது. ரோகித் சர்மா, கில் ஆகியோர் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இதைப் போன்று விராட் கோலி ஆகியோர் எங்களுடைய சேஸிங்கிற்கு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.வேகமாகவும் ரன்களை சேர்த்தனர்.
இருவரும் பேட்டிங் செய்திருந்தால் நாங்கள் 4,5 ஓவரர்களுக்கு முன்பே வெற்றியை பெற்றிருப்போம். ஆனால் தாமதமாக தான் இந்த இலக்கை நாங்கள் எட்டி இருக்கின்றோம். அது எப்போதுமே கடினமான விஷயம் தான். ஆடுகளமும் போகப் போக கொஞ்சம் தோய்வாக மாறியது. எனினும் டாப் ஆர்டர் வீரர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்து தான் எங்களுடைய பணி சுலபமாக மாறிவிட்டது.
ரவி சாஸ்திரி இங்கே இருக்கின்றார். அவர் பயிற்சியாளராக இருந்தபோது கடந்த ஏழு, எட்டு ஆண்டுகளில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகள் எவ்வளவு நெருக்கமாக முடிந்திருக்கிறது என்று அவருக்கு நன்றாக தெரியும். நியூசிலாந்து அணி எப்போதுமே வெற்றியை அவ்வளவு சீக்கிரமாக விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அவர்கள் எப்போதுமே போட்டியில் நிற்பார்கள். அதனால் தான் இந்தியா, நியூசிலாந்து போட்டிகள் எப்போதுமே ஒரு விறுவிறுப்பாக அமைகிறது என்று ராகுல் கூறினார்.