பெங்களூர்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஆடி வரும் முதல் டெஸ்ட் போட்டியில் சர்ஃபராஸ் கான் அடித்த சதம் மூத்த வீரர் ஒருவருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலமாக கே எல் ராகுல் டெஸ்ட் அணியில் தனது இடத்தை தக்க வைக்க போராடி வருகிறார். அவர் முக்கியமான போட்டிகளில் நன்றாக ரன் குவித்தாலும், தொடர்ந்து ரன் குவிப்பதில்லை என்ற விமர்சனம் உள்ளது.
இந்த நிலையில் தான் சர்ஃபராஸ் கான் அடித்த சதம் அவருக்கு வினையாக மாறி இருக்கிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் கே எல் ராகுல் வெறும் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில்

இந்திய டெஸ்ட் அணியில் சர்ஃபராஸ் கான் மாற்று வீரராக மட்டுமே இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது கே எல் ராகுல் காயத்தால் விலகி இருந்தபோது சர்ஃபராஸ் கான் இந்திய அணியில் வாய்ப்பு பெற்றார்.
அந்த தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி மூன்று அரை சதங்களை அடித்து இருந்தார். இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் கழுத்து வலியால் விலகியதால் சர்ஃபராஸ் கான் இந்திய அணியில் வாய்ப்பு பெற்றார். நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் சர்ஃபராஸ் கான் டக் அவுட் ஆகி இருந்தார். கே எல் ராகுலும் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆகி இருந்தார்.
இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணிக்கு எதிராக படுதோல்வியை தவிர்க்க வேண்டிய நிலையில் இந்தியா போராடி வந்தது. அப்போது நான்காம் வரிசையில் இறங்கிய சர்ஃபராஸ் கான் அதிரடியாக ஆடி 150 ரன்கள் சேர்த்தார். இதுவே அவரது முதல் டெஸ்ட் போட்டி சதம் ஆகும்.
சர்ஃபராஸ் கான் இதுவரை நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7 இன்னிங்ஸில் 350 ரன்கள் சேர்த்து இருக்கிறார். அவரது சராசரி 50 ஆக உள்ளது. இதை அடுத்து அவருக்கு இந்திய அணியில் நிரந்தர இடம் அளிக்க வேண்டும், நீண்ட காலம் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற ஆதரவு குரல்கள் எழுந்து உள்ளன. சுப்மன் கில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது அணிக்கு திரும்பி விடுவார் என கூறப்படுகிறது.
சுப்மன் கில் அணிக்கு திரும்பினாலும் சர்ஃபராஸ் கானை அணியில் ஆட வைக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் சிலர் பேசி உள்ளனர். அதன்படி கே எல் ராகுலை நீக்கிவிட்டு சர்ஃபராஸ் கானை ஆட வைக்க அதிக வாய்ப்பு உள்ளது. கே எல் ராகுல் இரண்டாவது இன்னிங்ஸில் 12 ரன்கள் மட்டுமே எடுத்தது அதற்கு வித்திடும் வகையில் அமைந்தது.