சென்னை: சஞ்சு சாம்சனின் மோசமான ஃபார்ம் காரணமாக டி20 அணியில் அவரது இடம் கேள்விக்குறியாகியுள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், கூறியுள்ளார். அதேசமயம், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இஷான் கிஷன் வெளிப்படுத்திய அபாரமான ஆட்டம், அணியில் அவருக்கு நிரந்தர இடத்தைப் பெற்றுத்தந்துள்ளது என அவர் தெரிவித்தார். இந்திய அணி 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்திய பிறகு ஸ்ரீகாந்த் இக்கருத்தைக் கூறினார்.
சஞ்சு சாம்சனின் மோசமான பேட்டிங் மற்றும் இஷான் கிஷனின் சிறப்பான ஃபார்ம், டி20 அணியில் சாம்சனின் இடத்தை அசைத்துப் போட்டுவிட்டதாக ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக கிஷன், 32 பந்துகளில் 76 ரன்கள் மற்றும் 13 பந்துகளில் 28 ரன்கள் என மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம், சாம்சன் மூன்று போட்டிகளில் வெறும் 16 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

குவாஹாட்டியில் நடந்த போட்டியில் சாம்சன் டக் அவுட் ஆன நிலையில், இந்தியா 3-0 தொடரை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்ற பிறகு ஸ்ரீகாந்த் பேசினார். "இஷான் கிஷனை இப்போது அணியில் இருந்து நீக்கவே முடியாது, அதற்கான வாய்ப்பே இல்லை. சஞ்சு சாம்சனை விட கிஷன் மிகவும் அபாயகரமான வீரர். சஞ்சுவுக்காக நான் வருந்துகிறேன். அவர் மிகவும் அவசரத்தில் தெரிகிறார். சற்று புத்திசாலித்தனமாக ஆடியிருந்தால் கடந்த போட்டியில் நன்றாக ரன்கள் எடுத்திருக்கலாம்" என்றார்.
சாம்சனின் நிலையற்ற ஆட்டமே சிக்கல் என்றும், ஒரு சதம் அடித்தால், பிறகு பெரிதாக ரன்கள் எடுப்பதில்லை என்றும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவரின் ஆட்டம் ஏற்ற இறக்கத்துடனே இருப்பதாகவும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அவரின் சதத்திற்குப் பிறகு ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும் ஸ்ரீகாந்த் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஆண்டு ஆசியக் கோப்பை வரை சாம்சன் இந்திய அணியின் தொடக்க வீரராக இருந்தார். சுப்மன் கில்லுக்காக அவர் மிடில் ஆர்டருக்கு தள்ளப்பட்டார். இந்த புதிய நிலைகளில் கில்லும் சாம்சனும் தடுமாறினர். சாம்சன் முதலில் நீக்கப்பட்டார், கில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 தொடரில் புறக்கணிக்கப்பட்டார்.
சாம்சன் மீண்டும் அணிக்குத் திரும்பிய சமயத்தில், சையத் முஷ்டாக் அலி தொடரில் சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் அவருக்கு மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான திலக் வர்மாவின் காயம், இஷான் கிஷனுக்கு மூன்றாவது இடத்தில் களமிறங்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.
திலக் வர்மா நான்காவது டி20 போட்டிக்குள் திரும்புவார் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் ஐந்தாவது போட்டி வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்றும், 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன் அவரை அவசரமாக களமிறக்க அணி நிர்வாகம் விரும்பவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திலக் மீண்டு வரும்போது, சாம்சன் அல்லது இஷான் கிஷனில் ஒருவர் அணியில் இருந்து நீக்கப்பட வேண்டும், அது சாம்சனாகத்தான் இருக்கும் என ஸ்ரீகாந்த் உறுதியாகக் கருதுகிறார்.
"சாம்சன் சில சமயங்களில் துரதிர்ஷ்டவசமாக இருக்கலாம், இதற்கு எதுவும் செய்ய முடியாது. திலக் வர்மா, இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் அணியில் நிச்சயம் இருப்பார்கள். வெளிப்படையாக சாம்சன் அணியில் இடம் பெற மாட்டார்," என்று அவர் கூறினார். இஷான் கிஷன் ஒரு விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனும் கூட, அவர் தற்போது மிகவும் அபாயகரமான ஃபார்மில் இருக்கிறார் என்பதையும் ஸ்ரீகாந்த் சுட்டிக்காட்டினார்.