மும்பை: இந்திய டெஸ்ட் அணியின் பிளேயிங் லெவனில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை சேர்த்து இருப்பதால் அணியில் விரிசல் எழலாம் என முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கூறி இருக்கிறார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய உத்தேச அணியில் நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்று இருந்தனர்.
ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா. குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் பட்டேல் என நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் உத்தேச அணியில் இருந்தனர். இந்த நால்வரில் அஸ்வின், ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் முதல் போட்டியின் பிளேயிங் லெவனில் வாய்ப்பு பெற்றனர். அந்தப் போட்டியில் இந்திய அணி தவறான டாஸ் முடிவை எடுத்து தோல்வி அடைந்தது. அதற்கு பந்துவீச்சாளர்களை மட்டுமே குறை சொல்ல முடியாது.

ஆனால், இரண்டாவது போட்டியின் போது குல்தீப் யாதவ் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக பேட்டிங் ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டார். இதன் மூலம் இந்திய அணியின் பேட்டிங்கை வலுப்படுத்தும் முயற்சி நடந்தது. அதே சமயம் மற்றொரு சுழற் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் அக்சர் பட்டேல் அணியில் இருக்கும் நிலையில் அவர் புறக்கணிக்கப்பட்டார். இதை சுட்டிக் காட்டி மனோஜ் திவாரி இந்திய அணியை எச்சரித்து இருக்கிறார்.
இது பற்றி மனோஜ் திவாரி பேசுகையில், "இந்தியாவின் முதல் எதிரி பெங்களூருவில் இருந்த வானிலை தான். அங்கு சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை தேர்வு செய்த இந்திய அணி டாஸ் வென்ற பின் பந்துவீச்சை தேர்வு செய்து இருக்க முடியும். ஆனால், அங்கு என்ன காரணத்திற்காக பேட்டிங் தேர்வு செய்தது என்று தெரியவில்லை. அங்கே தான் அனைத்து சிக்கலும் ஆரம்பித்தது. அனைத்தையும் தவறாக செய்து விட்டீர்கள். அதனால் முதல் போட்டியில் தோல்வி அடைந்தீர்கள். இரண்டாவது போட்டியில் மூன்று மாற்றங்களை செய்தீர்கள்." என்றார்.
மேலும், "வாஷிங்டன் சுந்தரை அணியில் சேர்த்தது சிறப்பான முடிவு என நீங்கள் சொல்லலாம். அவர் அதிக விக்கெட் வீழ்த்தினார். ஆனால், குல்தீப் யாதவ் விக்கெட் வீழ்த்த முடியாது என்று சொல்ல முடியாது. பேட்டிங் வாய்ப்பிற்காக வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டார். இதன் மூலம், இந்திய அணி தங்கள் முதலில் எடுத்த முடிவில் இருந்து மாறிச் சென்று வாஷிங்டன் சுந்தரை அணியில் சேர்த்தது. இதனால் இனிவரும் நாட்களில் இந்திய அணியில் குழப்பங்கள் ஏற்படலாம். அணியில் விரிசல் எழக்கூடிய வாய்ப்பு உள்ளது." என்றார் மனோஜ் திவாரி.
"அணியில் ஏற்கனவே சுழற் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் அக்சர் பட்டேல் இருக்கிறார். அவர் இதே போன்ற சூழ்நிலையில் இதற்கு முன் விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். ஆனால், அவரை புறக்கணித்து இருக்கிறீர்கள். குல்தீப் யாதவை இரண்டாவது போட்டியில் வெளியே அமர வைத்து இருக்கிறீர்கள்." என்று கூறி இருக்கிறார் மனோஜ் திவாரி.