விசாகப்பட்டினம்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி புதிய உலக சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். ஆட்டத்தின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தியதன் மூலம் இந்த அரிய சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
216 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனான அபிஷேக் சர்மா துவக்க வீரராகக் களமிறங்கினார். ஆட்டத்தின் முதல் ஓவரை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி வீசினார். அவர் வீசிய முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்க முயன்ற அபிஷேக் சர்மா, டெவோன் கான்வேயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அபிஷேக் சர்மாவை வீழ்த்தியதன் மூலம் மேட் ஹென்றி சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். ஒரு இருதரப்பு டி20 தொடரில், இரண்டு முறை இன்னிங்ஸின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய உலகின் முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இதற்கு முன்னதாக குவஹாத்தியில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியிலும் மேட் ஹென்றி இதே போன்றதொரு தாக்கத்தை ஏற்படுத்தினார். அந்தப் போட்டியிலும் அவர் வீசிய முதல் பந்திலேயே இந்திய துவக்க வீரர் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார்.
தற்போது தொடர்ந்து இரண்டு போட்டிகளில், ஆட்டத்தின் முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தி மேட் ஹென்றி எதிரணிக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்கிறார். தொடர்ந்து இரண்டு போட்டிகளில் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த முதல் பந்துவீச்சாளர் இவரே ஆவார்.
இதற்கு முன் ஸ்வீடன் நாட்டு வீரர் அப்துல் நாசர் பலூச் என்பவர் ஒரே தொடரில் இரண்டு முறை முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தியிருந்தார். ஆனால் அவர் நார்வே மற்றும் பின்லாந்து என இரண்டு வெவ்வேறு அணிகளுக்கு எதிராக அந்தச் சாதனையைச் செய்தார். ஆனால், மேட் ஹென்றி ஒரே அணிக்கு எதிராக (இந்தியா), ஒரே தொடரில் இந்தச் சாதனையை நிகழ்த்தி வரலாற்றுப் புத்தகத்தில் இடம் பிடித்துவிட்டார்.
இதே போட்டியில் நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ் மற்றொரு மைல்கல்லை எட்டினார். இப்போட்டியில் ஒரு சிக்ஸர் அடித்ததன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் 100 சிக்ஸர்களை விளாசிய மூன்றாவது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். அவருக்கு முன்னதாக மார்ட்டின் கப்தில் மற்றும் காலின் முன்ரோ ஆகியோர் இந்தச் சாதனையைச் செய்துள்ளனர்.