மும்பை: பும்ராவுக்கு அடுத்து இந்தியாவின் ஆகச் சிறந்த வேகப் பந்துவீச்சாளராக உருவெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வரும் மயங்க் யாதவ் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியாத அளவுக்கு காயத்தில் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் தனது சர்வதேச அறிமுகத்தை பெற்றிருந்தார்.
150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் ஆற்றல் கொண்டவர் என்பதால் நான்கு ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே ஆடிய அனுபவம் உள்ள அவரை டி20 அணியில் தேர்வு செய்து ஆச்சரியம் அளித்தது தேர்வுக் குழு. வங்கதேச டி20 தொடரில் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடி 6 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

அவர் தனது அறிமுகத்தில் சிறப்பாக செயல்பட்டதால் அடுத்து ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் பங்கேற்பார் என பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் மயங்க் யாதவுக்கு முதுகில் வலி ஏற்பட்டது. அதை மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்த நிலையில் அவர் குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கின்றனர்.
அவரால் அடுத்த மாதம் துவங்க உள்ள ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தான் சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அவரது பெயர் இடம் பெறவில்லை. இதன் இடையே அவர் ரஞ்சி டிராபி தொடரிலும் விளையாட முடியாத நிலையில் சிக்கி இருக்கிறார்.
2024 ஐபிஎல் தொடரில் அறிமுகம் ஆன மயங்க் யாதவ் அப்போதும் நான்கு போட்டிகளில் மட்டுமே விளையாடினார். காயம் காரணமாக மற்ற போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. அதன் பின் சிகிச்சை எடுத்துக் கொண்டு நேரடியாக இந்திய டி20 அணியில் வாய்ப்பு பெற்றார். இப்போது மூன்று சர்வதேச டி20 போட்டிகளில் ஆடிய பின் அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டு இருக்கிறது.
அடிக்கடி காயம் ஏற்படுவதால் மயங்க் யாதவின் கிரிக்கெட் எதிர்காலம் என்ன ஆகும்? என்ற கேள்வியும் உள்ளது. அவர் பிப்ரவரி மாதம் தான் போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு தயார் ஆவார். மூன்று மாதங்களுக்கு அவர் பந்தை தொட முடியாது. இந்திய அணி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. அந்த தொடரில் மயங்க் யாதவுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.