மும்பை: நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கதேச டெஸ்ட் தொடரில் இடம்பிடித்திருந்த இடதுகை வேகப்பந்துவீச்சாளரான யாஷ் தயாள் நீக்கப்பட்டுள்ளார். அதேபோல் ரிசர்வ் வீரர்களாக 3 பவுலர்கள் தேர்வாகியுள்ள நிலையில், யாஷ் தயாள் பெயர் அதிலும் இடம்பெறவில்லை.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. அதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இளம் வேகப்பந்துவீச்சாளரான யாஷ் தயாள் நீக்கப்பட்டுள்ளார். வங்கதேச டெஸ்ட் தொடரில் இடம்பெற்ற யாஷ் தயாள், நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு இராணி கோப்பையில் யாஷ் தயாளின் மோசமான செயல்பாடுகளே காரணமாக அமைந்தது. ஏனென்றால் 28 ஓவர்கள் வீசிய யாஷ் தயாள் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். தரமான இடதுகை வேகப்பந்துவீச்சாளரை இந்திய அணி தேடி வந்த நிலையில், துலீப் டிராபி தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலமாக இந்திய அணிக்குள் வந்தார்.
ஆனால் எதிர்பார்த்த அளவிற்கான கன்சிஸ்டன்சி அவருடன் இல்லாதது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட யாஷ் தயாள் பெயர் சேர்க்கப்படவில்லை. இந்த டெஸ்ட் தொடருக்கான ரிசர்வ் வீரர்களாக மயங்க் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, பிரசித் கிருஷ்ணா மற்றும் ஹர்சித் ராணா உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் பிரசித் கிருஷ்ணா ஏற்கனவே இந்திய அணிக்காக சில டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். மற்ற 3 வீரர்களும் வங்கதேச டி20 தொடரில் தான் இந்திய அணிக்காக அறிமுகம் செய்யப்பட்டனர். அதில் ஹர்சித் ராணா நாளைய ஆட்டத்தில் தான் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதற்குள் அவர்கள் இந்திய டெஸ்ட் அணிக்கான மாற்று வீரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதிலும் மயங்க் யாதவ் ரெட் பால் அணியில் சேர்க்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஏனென்றால் மணிக்கு 150 கிமீ வேகத்தில் பவுலிங் செய்யக் கூடிய வீரராக உருவாகியுள்ள மயங்க் யாதவ், ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணிக்கு மிகவும் உதவியாக இருப்பார் என்று சொல்லப்பட்டு வந்தது.
ஏற்கனவே மோர்னே மோர்கல் ஆதரவு அவருக்கு இருந்து வந்த நிலையில், நியூசிலாந்து டெஸ்ட் தொடரிலேயே ரெட் பாலில் பவுலிங் செய்ய வைத்து சோதனை செய்யப்படவுள்ளதாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை முகமது ஷமி காயத்தில் இருந்து விடுபடவில்லை என்றால், 4வது வேகப்பந்துவீச்சாளராக மயங்க் யாதவ் அல்லது ஹர்சித் ராணா இருவரில் ஒருவர் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.