அகமதாபாத்: 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்திய அணி, முன்னேறி இருந்தாலும், தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவின் மோசமான ஆட்டம் அணி நிர்வாகத்திற்குப் பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. இந்நிலையில், இறுதிப்போட்டியில் அபிஷேக் சர்மாவை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாகப் ரிங்கு சிங்கை அணியில் சேர்க்க வேண்டும் என முன்னாள் வீரர் முகமது கைஃப், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியின் இளம் தொடக்க வீரரான அபிஷேக் சர்மா தொடர்ந்து ஏமாற்றமளித்து வருகிறார். இந்தத் தொடரில் இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே அவர் அரைசதம் கடந்துள்ளார். குறிப்பாக, பவர் பிளே ஓவர்களிலேயே சுழற்பந்து வீச்சாளர்களிடம் விக்கெட்டை பறிகொடுப்பது வாடிக்கையாகிவிட்டது. இதுவரை நான்கு முறை சுழற்பந்து வீச்சில் அவர் ஆட்டமிழந்துள்ளார். எதிரணிகள் பலவீனத்தைப் புரிந்து கொண்டு அவரைத் தொடக்கத்திலிருந்தே குறிவைத்துத் தாக்குகின்றன.
மேலும், உலகக் கோப்பைத் தொடங்குவதற்கு முன்பு அவருக்கு ஏற்பட்ட வயிற்றுப் பிரச்சனை காரணமாக உடல் எடையைக் குறைத்துள்ளார். இது அவரது பேட்டிங் வேகத்தையும், தன்னம்பிக்கையையும் பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. பேட்டிங்கில் மட்டுமல்லாமல், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இரண்டு கேட்சுகளை நழுவவிட்டு பீல்டிங்கிலும் அவர் சொதப்பியது குறிப்பிடத்தக்கது.

இது குறித்துத் தனது யூடியூப் சேனலில் பேசியுள்ள முகமது கைஃப், இறுதிப்போட்டியில் அதிரடியான மாற்றத்தைச் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். "அபிஷேக் சர்மாவுக்கு ஒரு ஓய்வு கொடுப்பதில் தவறில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபார்மில் இல்லாத பிராண்டன் கிங்கை நீக்கிவிட்டு ரோஸ்டன் சேஸை களமிறக்கியது போல, இந்தியாவும் ஒரு மாற்றத்தைச் செய்ய வேண்டும். சஞ்சு சாம்சனை உள்ளே கொண்டு வந்த மாற்றம் எப்படி வெற்றிக்கு உதவியதோ, அதேபோல இதுவும் உதவும்.
ரிங்கு சிங் போன்ற ஒருத் தரமான வீரர் அணியின் பெஞ்சில் அமரவைக்கப்பட்டுள்ளார். ரஞ்சி டிராபி, ஐபிஎல் என அனைத்து இடங்களிலும் ரன் குவிக்கும் ரிங்கு சிங்கை, தடுமாறிக்கொண்டிருக்கும் அபிஷேக் சர்மாவுக்குப் பதிலாக இறுதிப்போட்டியில் களமிறக்க வேண்டும்" என்று கைஃப் தெரிவித்துள்ளார்.

அணிக்குத் திரும்பியதிலிருந்து சஞ்சு சாம்சன் தொடர்ந்து இரண்டு ஆட்டநாயகன் விருதுகளை வென்று அசத்தியுள்ளார். இது குறித்துப் பேசிய கைஃப், சஞ்சு சாம்சனையும் அபிஷேக் சர்மாவையும் ஒப்பிட முடியாது என்றார். "சஞ்சு சாம்சன் ஏற்கனவே முழுமையடைந்த ஒரு வீரர். அவர் 11 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமாகிவிட்டார். டி20 போட்டிகளில் 8000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர் அடித்தவர்கள் பட்டியலில் முன்னிலையில் இருக்கிறார்.

ஆனால், அபிஷேக் சர்மா இப்போதுதான் வளர்ந்து வரும் வீரர். ஐசிசி தொடர்களின் அழுத்தத்தைச் சமாளிக்க அவருக்கு இன்னும் கால அவகாசம் தேவை. அவர் இன்னும் முழுமையடையாத ஒரு வீரர் என்பதால், இறுதிப்போட்டி போன்ற பெரிய மேடைகளில் அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்" என்று முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.