மும்பை: "விராட் கோலி பேட்டிங்கில் தொடர்ந்து தவறுகளை செய்து கொண்டு இருக்கிறார். இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் அவர் இதை மாற்றிக் கொள்ள வேண்டும்" என முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறி இருக்கிறார்.
இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விராட் கோலி சரியாக ரன் குவிக்கவில்லை. அது ஒரு பிரச்சினையாக இருந்தாலும் கடைசி இரண்டு முறை அவர் ஆட்டம் இழந்த விதம் மிகவும் மோசமாக இருந்தது அனைவரையும் கவலை அடைய வைத்துள்ளது.

நியூசிலாந்து னைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி மிட்செல் சான்ட்னர் வீசிய ஃபுல் டாஸ் பந்தில் பவுல்டு அவுட் முறையில் ஆட்டம் இழந்து இருந்தார். பொதுவாக சராசரியாக ஆடும் பேட்ஸ்மேன் கூட ஃபுல் டாஸ் பந்துகளில் எளிதாக ரன் குவிப்பது வழக்கம். ஆனால், உலகின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன விராட் கோலி ஒரு ஃபுல் டாஸ் பந்தில் பவுல்டு அவுட் ஆனது அதிர்ச்சியை அளித்தது.
பந்து வீசிய மிட்செல் சான்ட்னர் கூட இதை எதிர்பார்க்கவில்லை. அடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் விராட் கோலி, ரன் குவிக்க வேண்டிய அவசியம் இல்லாத நிலையிலும் ஒரு ரன் ஓட ஆசைப்பட்டார். ஒரு ரன் ஓடுவதற்கான சாத்தியம் இல்லை என்பதை ஊகிக்கத் தவறிய அவர் ரன் அவுட் ஆனார்.
இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி முதன்முறையாக ரன் அவுட்டாகி இருந்தது குறிப்பிடத்தக்கது அதிலும் அவர் மோசமான முடிவை எடுத்து ரன் அவுட் ஆனது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இந்த நிலையில் முன்னாள் வீரர் முகமது கைஃப் இது பற்றி ட்விட்டரில் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
அதில், "விராட் கோலி இந்தத் தொடரில் ஃபுல் டாஸ் பந்தில் பவுல்டு அவுட் ஆகி இருக்கிறார். இப்போது தவறான முடிவை எடுத்து ரன் அவுட் ஆகி இருக்கிறார். இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் விராட் கோலி இதை உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும்." எனக் கூறி இருக்கிறார்.