மும்பை: நியூசிலாந்து அணியின் ஸ்பின்னர் அஜாஸ் பட்டேல் மூன்றாவது போட்டியில் இந்திய அணிக்கு எதிராக 11 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அதன் காரணமாகவே இந்திய அணி மூன்றாவது போட்டியில் ஆறுதல் வெற்றி பெற முடியாமல் தோல்வி அடைந்தது. இந்த நிலையில், முன்னாள் வீரர் முகமது கைஃப் அவர் ஒரு நல்ல பவுலரே இல்லை என கூறி இருக்கிறார்.
அஜாஸ் பட்டேல் போன்ற சுமாரான ஸ்பின்னர்கள் இந்தியாவின் ஒவ்வொரு கிரிக்கெட் கிளப்பிலும் இருக்கிறார்கள். அப்படி ஒரு சுமாரான பந்துவீச்சாளரிடம் தான் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது என விளாசி இருக்கிறார் முகமது கைஃப். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவராக அஜாஸ் பட்டேல் இருக்கிறார்.

அவர் இந்த தொடரில் மொத்தம் 15 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அதில் 11 விக்கெட்கள் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மட்டுமே கிடைத்தன. மூன்றாவது போட்டியில் இந்திய அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இருந்தது. அதற்கு முக்கிய காரணம் அஜாஸ் பட்டேல் தான்.
ஆனால், அவர் ஒரு நல்ல ஸ்பின்னரே இல்லை. அவர் ஒரு ஓவரில் வீசிய ஆறு பந்துகளில் நான்கு பந்துகள் மோசமாக இருந்தது என முகமது கைஃப் சுட்டிக் காட்டி இருக்கிறார். இது பற்றி அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "அஜாஸ் பட்டேல் நன்றாக பந்து வீசவில்லை. அவருடைய பிட்ச் மேப்பை பார்த்தால் ஒரு ஓவரில் இரண்டு ஃபுல் டாஸ், இரண்டு ஷார்ட் பால்கள் மற்றும் இரண்டு லென்த் பந்துகளை வீசி இருக்கிறார். அப்படி இருந்தும் அவர் விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்." என்றார்.
மேலும், "அவரைப் போன்ற பந்துவீச்சாளர்கள் இந்தியாவில் ஒவ்வொரு கிரிக்கெட் கிளப்புகளிலும் இருக்கிறார்கள். அப்படி ஒருவரிடம் தான் இந்திய அணி விக்கெட்களை இழந்துள்ளது. அடுத்து கிளென் ஃபிலிப்ஸ் ஒரு பகுதி நேர பந்துவீச்சாளர். அவருக்கு எப்படி நல்ல பந்துகளை வீச வேண்டும் என்று தெரியாது. நாம் பகுதி நேர பந்து வீச்சாளர்களிடம் தான் வீழ்ந்து இருக்கிறோம். தரமான ஸ்பின்னர்களிடம் அல்ல." என்றார்,
"அஜாஸ் பட்டேல் மும்பை வான்கடேவில் மட்டும் 22 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார் என மக்கள் சொல்லலாம். ஆனால், அவர் பந்தை சரியாக பிட்ச் செய்யவில்லை. அஜாஸ் பட்டேல் ஒரு ஓவரில் இரண்டு நல்ல பந்துகளை மட்டும் வீசி விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோற்றது அவமானகரமாக இருந்தது. மும்பை டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியில் ஒரு பந்து வீச்சாளர் கூட சரியாக பந்து வீசவில்லை. மிட்செல் சான்ட்னர் மட்டுமே நியூசிலாந்து அணியில் நன்றாக பந்து வீசினார். புனே டெஸ்ட் போட்டியில் அவரது செயல்பாடு அற்புதமாக இருந்தது." என்றார் முகமது கைஃப்.