துபாய்: இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் அமைப்புக்கு கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார். அதற்கு உலகின் மற்ற முன்னணி பந்துவீச்சாளர்களான டிம் சவுத்தி மற்றும் வெர்னான் பிலாண்டர் ஆகியோரிடம் இருந்து ஆதரவு கிடைத்து உள்ளது. ஷமி வைத்த கோரிக்கை என்ன? அதனால் பவுலிங் விதியில் மாற்றம் வருமா? என பார்க்கலாம்.
2020 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் அமைப்பு கிரிக்கெட்டில் சில விதிகளை அமல்படுத்தி இருந்தது. அதில் ஒன்றுதான் கிரிக்கெட் பந்தின் மீது எச்சிலைப் பயன்படுத்தக் கூடாது என்பது. அதன் மூலம் கொரோனா பாதிப்பு பரவுவதற்கான வாய்ப்பு இருந்ததால் அந்த விதி அப்போது அமல்படுத்தப்பட்டு இருந்தது.
கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் எதற்காக எச்சிலை பந்தில் பயன்படுத்துகிறார்கள் என்றால், பந்து பழையதாக மாறும்போது ஒரு பக்கத்தில் உள்ள பளபளப்பான தன்மையை மட்டும் நீக்குவதற்காகவே கிரிக்கெட் வீரர்கள் பந்தின் மீது எச்சிலைப் பயன்படுத்தி தேய்ப்பார்கள். அப்படி ஒரு பக்கத்தை மட்டும் தேய்த்துக் கொண்டே வரும்போது அந்தப் பக்கத்தில் உள்ள பளபளப்பு தன்மை குறையும். அதன் மூலம் பந்து குறிப்பிட்ட ஓவர்களுக்குப் பிறகு ரிவர்ஸ் ஸ்விங் ஆகும்.

ஆனால், 2020 ஆம் ஆண்டு அந்த தடை அமல்படுத்தப்பட்டது முதல் வேகப்பந்துவீச்சாளர்களால் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடிவதில்லை. குறிப்பாக முகமது ஷமி ரிவர்ஸ் ஸ்விங் வீசுவதில் உலகிலேயே முன்னணியில் இருக்கிறார். அவர் இந்த விதியால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில்தான் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னதாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது முகமது ஷமி இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்து இருந்தார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ரிவர்ஸ் ஸ்விங் செய்வதற்கு ஏற்ற வகையில் பந்தில் எச்சிலைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
தற்போது டிம் சவுத்தி அதற்கு ஆதரவு அளித்திருக்கிறார். அவரும் இந்த விதியை நீக்க வேண்டும் என கூறியிருக்கிறார். அவர் சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையிலும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவாக தற்போது பேசியிருக்கிறார். "ஒரு நாள் போட்டிகளில் 300 ரன்கள் என்பது தற்போது எளிதாக எடுக்கப்பட்டு வருகிறது. எனவே பந்துவீச்சாளர்களுக்கு சமநிலை வேண்டும் எனில் எச்சிலை பயன்படுத்துவதற்கு அனுமதிக்க வேண்டும். அது சிறிய அளவில் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும்" என சுட்டிக்காட்டி இருக்கிறார்.
தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் வெர்னான் பிலாண்டர் பேசுகையில், "பந்தில் எச்சிலை பயன்படுத்துவதற்கான அனுமதி தற்போது தேவை என நான் நினைக்கிறேன். பேட்ஸ்மேன்கள் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருவதால் இது அவசியம்." என அவர் கூறியிருக்கிறார்.