அகமதாபாத்: நரேந்திர மோடி மைதானத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி 2026 டி20 உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது. இந்த மாபெரும் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை பாராட்டி வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேற்றைய இறுதிப் போட்டியை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோருடன் விஐபி மாடத்திலிருந்து தோனி கண்டுகளித்தார். போட்டி முடிந்து இந்தியா கோப்பையை வென்ற சில நிமிடங்களிலேயே, தோனி ஒரு மகிழ்ச்சியான பதிவை வெளியிட்டார். நீண்ட நாட்களாக சமூக வலைத்தளங்களில் அமைதியாக இருந்த தோனி திடீரென ஒரு பதிவை வெளியிட்டவுடன் ரசிகர்கள் அதிக அளவில் அதை பகிரத் துவங்கினர்

அதில், "அகமதாபாத்தில் வரலாறு படைக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும், அணி வீரர்களுக்கும், பயிற்சி ஊழியர்களுக்கும் எனது வாழ்த்துகள். நீங்கள் அனைவரும் விளையாடுவதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது" என்று குறிப்பிட்டார். மேலும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரைக் குறிப்பிட்டு, "கோச் சார், உங்கள் முகத்தில் சிரிப்பு அருமையாக இருக்கிறது. தீவிரமான முகபாவனையுடன் கூடிய இந்தச் சிரிப்பு ஒரு சிறந்த கலவை. மிகச் சிறப்பான செயல்பாடு" என்று தோனி பாராட்டியுள்ளார். சமூக வலைத்தளங்களில் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகக் கூறப்படும் வதந்திகளுக்கு தோனியின் இந்தப் பதிவு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்தப் பதிவில் தோனி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஒரு சிறப்பான பாராட்டையும் தெரிவித்துள்ளார். இறுதிப் போட்டியில் பும்ரா 15 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்து அணியின் பேட்டிங் வரிசையைச் சரித்தார்.
இது குறித்து தோனி தனது பதிவில், "பும்ராவைப் பற்றி நான் எதுவும் எழுதாமல் இருப்பதே நல்லது. அவர் ஒரு சாம்பியன் பந்துவீச்சாளர்" என்று குறிப்பிட்டுள்ளார். பும்ராவின் சிறப்பான பந்துவீச்சை விவரிக்க தன்னிடம் வார்த்தைகளே இல்லை என்பதையும், அவர் ஒரு நவீன கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர் என்பதையும் தோனி இவ்வாறு சுருக்கமாகவும் அழகாகவும் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, சஞ்சு சாம்சன் (89 ரன்கள்) மற்றும் அபிஷேக் சர்மா (52 ரன்கள்) ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 19 ஓவர்களில் 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் கபில் தேவ், எம்எஸ் தோனி, ரோகித் சர்மா ஆகிய உலகக் கோப்பையை வென்ற இந்திய கேப்டன்களின் பட்டியலில் சூர்யகுமார் யாதவும் தற்போது இணைந்துள்ளார்.