தரம்சாலா: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரச்சின் - மிட்செல் கூட்டணி குல்தீப் யாதவை குறி வைத்து அட்டாக் செய்து வரும் சூழலில், அஸ்வினை பிளேயிங் லெவனில் சேர்த்திருக்க வேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் உச்சக்கட்ட ஃபார்மில் விளையாடி வருகிறது இந்தியா, நியூசிலாந்து அணிகள். இந்த இரு அணிகள் தரம்சாலா மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் களமிறங்கியுள்ளனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து நியூசிலாந்து அணி தரப்பில் கான்வே - யங் கூட்டணி களமிறங்கியது.

இதில் கான்வே ரன் ஏதும் எடுக்காமலும், யங் 17 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் நியூசிலாந்து அணி 19 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ரச்சின் - மிட்செல் கூட்டணி இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் தலா 5 ஓவர்களை வீசிய நிலையில், இரண்டாவது ஸ்பெல்லை ஷமி மற்றும் ஜடேஜா வீசினர்.
இவர்கள் இருவரையும் சமாளித்து சிறப்பாக ஆடிய ரச்சின் - மிட்செல் கூட்டணி 16 ஓவர்கள் முடிவில் 65 ரன்கள் சேர்த்தது. இவர்களின் பார்ட்னர்ஷிப்பை பிரிக்க ரோகித் சர்மா உடனடியாக குல்தீப் யாதவை அட்டாக்கில் கொண்டு வந்தார். மிடில் ஓவர்களில் இந்திய அணியின் விக்கெட் டேக்கராக விளங்கி வரும் குல்தீப் யாதவ், இந்த உலகக்கோப்பை தொடரில் 6 விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார்.
இதையடுத்து குல்தீப் யாதவ் வீசிய முதல் ஓவரில் 7 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 19வது ஓவரில் 2 சிக்சர்கள் உட்பட 16 ரன்கள் சேர்க்கப்பட்டது. மீண்டும் குல்தீப் யாதவ் 21வது ஓவரை வீசிய போது ஒரு சிக்ஸ் உட்பட 9 ரன்கள் விளாசப்பட்டது. இதையடுத்து அடுத்த ஒரேயொரு ஓவர் மட்டும் வழங்கிய ரோகித் சர்மா, உடனடியாக அவரை அட்டாக்கில் இருந்து வெளியேற்றினார். 5 ஓவர்களில் மொத்தமாக 48 ரன்களை விட்டுக் கொடுத்தார் குல்தீப் யாதவ்.
இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி 5 பவுலர்களுடன் களமிறங்கிய நிலையில், ஒரேயொரு பவுலரை நியூசிலாந்து அணி குறி வைத்து அட்டாக் செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா இருவரும் இடதுகை பேட்ஸ்மேன்களை வீழ்த்த திணறி வருவது ஊர் அறிந்த ஒன்றாகும். இந்த நிலையில் 5 இடதுகை பேட்ஸ்மேன்கள் உள்ள நியூசிலாந்து அணிக்கு எதிராக அஸ்வினை சேர்த்திருக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.