பெங்களூர்: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இருக்கும் நியூசிலாந்து அணி மாபெரும் வரலாற்று சாதனையை செய்து இருக்கிறது. 1988க்கு பின்பு நியூசிலாந்து அணி முதல் முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இருக்கிறது. இதுவே இந்திய மண்ணில் நியூசிலாந்து அணியின் மூன்றாவது டெஸ்ட் போட்டி வெற்றி ஆகும்.
இதற்கு முன் 1969இல் ஒரு முறையும், 1988இல் ஒரு முறையும் மட்டுமே நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இருக்கிறது. இதுவரை இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் 17 தோல்விகள் மற்றும் 17 டிரா செய்து இருக்கிறது. தற்போது கிடைத்த பெங்களூர் டெஸ்ட் வெற்றியுடன் சேர்த்து மொத்தம் 3 வெற்றிகளை மட்டுமே பெற்று இருக்கிறது நியூசிலாந்து.
நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் இதுவரை டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 1988இல் ஒரு போட்டியில் வென்ற நியூசிலாந்து அணி அதன் பின் 35 ஆண்டுகளில் ஆடிய 19 போட்டிகளில் 10 தோல்விகள் மற்றும் 9 டிரா செய்து இருந்தது. நீண்ட இடைவெளிக்கு பின் இந்திய மண்ணில் தனது மூன்றாவது டெஸ்ட் வெற்றியை பதிவு செய்து இருக்கிறது.
இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் தடைப்பட்டதும், இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததும் நியூசிலாந்து அணிக்கு சாதகமாக அமைந்தது. அதை பயன்படுத்தி நியூசிலாந்து அணி வேகப் பந்துவீச்சாளர்கள் இந்திய அணியை முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தனர்.

அதுவே இந்த போட்டியில் நியூசிலாந்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இரண்டாவது இன்னிங்ஸில் 462 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயம் செய்தது.
ஐந்தாம் நாள் அன்று நியூசிலாந்து அணி முதல் இரண்டு விக்கெட்களை விரைவாக இழந்தாலும் அதன் பின் வெற்றி இலக்கை எட்டியது. ரச்சின் ரவீந்தரா 39 ரன்கள் எடுத்தும், வில் யங் 48 ரன்கள் எடுத்தும் நியூசிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இதன் மூலம் 36 ஆண்டுகளுக்கு பின்னர் நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இருக்கிறது.