முதல் ஒருநாள் போட்டி
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஹாமில்டன் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணி திட்டம்
ஹாமில்டன் ஆடுகளத்தில் சேஸிங் செய்வது எளிது என்பதால் இந்தியா 350 ரன்களுக்கும் மேல் குவிக்க வேண்டும் என கருதப்பட்டது. கேப்டன் கோலி, மின்னல் வேகத்தில் பந்து வீசும் நவ்தீப் சைனி மற்றும் சிறப்பான பார்மில் இருக்கும் மனிஷ் பாண்டே ஆகியோரை விடுத்து ஷர்துல் தாக்குர் மற்றும் கேதார் ஜாதவ்வை அணியில் தேர்வு செய்தார்.
இந்தியா பேட்டிங்
இந்தியா அணிக்கு புதிய துவக்க வீரர்களாக ப்ரித்வி ஷா - மயங்க் அகர்வால் களமிறங்கினர். ப்ரித்வி ஷா 20, மயங்க் அகர்வால் 32 ரன்கள் மட்டுமே எடுத்தனர். கேப்டன் கோலி மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டம் ஆடி 51 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
ஸ்ரேயாஸ் ஐயர் சதம்
நான்காம் வரிசையில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் நிதான ஆட்டம் ஆடி, பின் வேகம் எடுத்து சதம் கடந்தார். இது அவரின் முதல் ஒருநாள் போட்டி சதம் ஆகும். மறுபுறம் ராகுல் அதிரடி ஆட்டம் ஆட இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
இந்தியா ஸ்கோர்
கடைசி ஓவர்களில் கேதார் ஜாதவ், ராகுல் அதிரடி ஆட்டம் ஆட இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்தது. இந்திய அணியால் 350 ரன்களை தாண்ட முடியவில்லை என்றாலும், இது போதுமான ஸ்கோர் என கேப்டன் கோலி தப்புக் கணக்கு போட்டார்.
நியூசிலாந்து அபார ஆட்டம்
நியூசிலாந்து அணி துவக்கம் முதலே அபார ஆட்டம் ஆடியது. நீண்ட கூட்டணிகள் அமைத்து ரன் குவித்து வந்தது. துவக்க வீரர் மார்ட்டின் கப்தில் 32, ஹென்றி நிக்கோல்ஸ் 78 ரன்கள் குவித்தனர். டாம் பிளண்டல் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினார்.
ராஸ் டெய்லர் - லாதம் அதிரடி
அதன் பின் ஜோடி சேர்ந்த ராஸ் டெய்லர் மற்றும் தற்காலிக கேப்டன் டாம் லாதம் போட்டியை நியூசிலாந்து வசம் எடுத்துச் சென்றனர். லாதம் அபாரமாக ஆடி 48 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார். இந்த ஜோடி இந்திய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தது.
வாரி இறைத்த இந்தியா
மத்திய ஓவர்களில் இந்திய அணி ரன்களை வாரி வழங்கியது குறிப்பாக குல்தீப் யாதவ் மற்றும் ஷர்துல் தாக்குர் பந்துவீச்சை குறி வைத்து துவம்சம் செய்தனர் நியூசிலாந்து வீரர்கள். ஆனால், அந்த நிலையை மாற்ற கேப்டன் கோலி எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
ஆறாவது பந்துவீச்சாளர் எங்கே?
குறிப்பாக, ஆறாவது பந்துவீச்சாளர் என்ற இடத்தில் தான் கேதார் ஜாதவ் அணியில் தேர்வு செய்யப்பட்டார். ஆனால். அவருக்கு ஒரு ஓவர் கூட அளிக்கவில்லை கேப்டன் கோலி. தொடர்ந்து குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்குர் ஓவர்கள் இடையே வீசப்பட, அந்த ஓவர்களில் ரன் குவித்தது நியூசிலாந்து.
இந்தியா தோல்வி
லாதம் 69, நீஷம் 9, கிராண்ட்ஹோம் 1 ரன்னில் குறைந்த இடைவெளிகளில் ஆட்டமிழந்தாலும், அதற்குள் நியூசிலாந்து அணி இலக்கை நெருங்கி இருந்ததால் நிதான ஆட்டம் ஆடி 48.1 ஓவரில் வெற்றி இலக்கை கடந்தது. நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஸ் டெய்லர் சதம் அடித்து, 109 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் தன் முதல் தோல்வியை சந்தித்துள்ளது.