விசாகப்பட்டினம்: இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் ஷர்மாவின் ஆட்டத்தில் எந்தவொரு பலவீனத்தையும் கண்டறிய முடியாமல் தடுமாறுவதாக நியுசிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஜேக்கப் ஓரம் தெரிவித்துள்ளார். ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 271.43 என்ற அபாரமான ஸ்ட்ரைக் ரேட்டுடன் அபிஷேக் ஷர்மா களத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
அண்மையில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில், இந்தியா, நியுசிலாந்தின் 154 ரன்கள் இலக்கை வெறும் 10 ஓவர்களில் துரத்தி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றது.அபிஷேக் ஷர்மாவின் ஆட்டத்தில் ஒரு சிறிய குறைபாட்டைக் கண்டறிந்தாலும், அவரது அதிரடி ஆட்டம் காரணமாக, அதற்கான திட்டத்தை செயல்படுத்துவது மிகவும் சவாலாக உள்ளதாக ஓரம் தெரிவித்துள்ளார்.

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான அபிஷேக், இந்தத் தொடரில் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் 76 சராசரியுடன், 271.43 ஸ்ட்ரைக் ரேட்டில் 152 ரன்கள் குவித்து, அபாரமான ஃபார்மில் உள்ளார். போட்டிக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய ஜேக்கப் ஓரம், “இதற்கான பதில் மிகவும் எளிமையானது: இது மிகவும் கடினம். அவரது ஸ்ட்ரைக் ரேட்டைப் பார்க்கும்போது, முதலில் அவரது ஆட்டத்தில் எந்தப் பலவீனத்தையும் கண்டறிவது கடினம். பிறகு, அவருக்கு எதிராக ஒரு திட்டத்தைச் செயல்படுத்த மிகவும் சவாலானது” என்று விளக்கினார்.
“கிரிக்கெட்டில், பேட்டிங் அல்லது பந்துவீச்சு எதுவாக இருந்தாலும், 'செயல்படுத்துதல்’ (Execution) என்பதுதான் மிகவும் கடினமான ஒன்று. களத்தில் பந்து எல்லா திசைகளிலும் பறக்கும் போது, ஒருவித குழப்பம்வீரர்கள் மத்தியில் நிலவும். அப்போது, அமைதியாகவும், கட்டுப்பாட்டுடனும், திட்டங்களை நினைவில் கொண்டும், அவற்றைச் செயல்படுத்த வேண்டும். அதற்கு மன உறுதி தேவை. இதனை எங்கள் வீரர்கள் கற்று வருகின்றனர். டி20 உலககோப்பைக்கு முன்பு அதற்கு தான் இந்த தொடரே நடைபெறுகிறது."
“போட்டி முடிவுகள் எப்படி அமைந்தாலும், இந்த அனுபவத்திலிருந்து நாங்கள் மேம்பட்டு, மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள சூப்பர் எட், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு அருகில் நியுசிலாந்து அணி இருந்தால், இந்தத் தொடர் எங்களுக்கு மிகப்பெரிய அளவில் அனுபவத்தை தந்திருக்கும் என்று அர்த்தம். . ஏனெனில் நாங்கள் இதிலிருந்து நிறைய கற்றுக் கொண்டிருப்போம்” என்று ஜேக்கப் ஓரம் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.