நாக்பூர்: நாக்பூரில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணியிடம் 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் மனம் திறந்து பேசியுள்ளார். இந்திய அணியின் பேட்டிங் வலிமையைச் சமாளிக்க முடியவில்லை என்பதை அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்தியா நிர்ணயித்த 239 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி, 190 ரன்களுக்குப் போராடித் தோல்வியடைந்தது. போட்டிக்குப் பின் பரிசளிப்பு விழாவில் பேசிய சாண்ட்னர், இந்திய அணியின் ஆதிக்கத்தைப் பாராட்டினார்.

தோல்வி குறித்துப் பேசிய சாண்ட்னர், "நாங்கள் எதிர்பார்த்தது போலவே இந்தியா மிகச்சிறப்பாக விளையாடியது. இந்திய அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்துவது எவ்வளவு கடினம் என்பது எங்களுக்குத் தெரியும். அவர்கள் மிகச்சிறந்த அணியாக இருக்கிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாகச் சொந்த மண்ணில் அவர்களின் சாதனை பிரமிக்க வைக்கிறது. இன்றைய நாள் அவர்களுக்குச் சாதகமாக அமைந்துவிட்டது" என்று கூறினார்.
பந்துவீச்சில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்தும், கடைசி நேரத்தில் அதிக ரன்களை வாரி வழங்கியது குறித்தும் அவர் விளக்கம் அளித்தார். "ஆடுகளத்தின் தன்மையைப் பார்க்கும்போது, வேகத்தைக் குறைத்து 'கட்டர்' (Cutters) வீசுவது பலன் தரும் என்று நினைத்தோம். அதனால்தான் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினோம். அறிமுக வீரர் கிறிஸ்டியன் கிளார்க் தனது வேலையைச் சரியாகச் செய்தார். அவர் வீசிய வேகமான ஸ்பின் பந்துகளை எதிர்கொள்வது பேட்ஸ்மேன்களுக்குக் கடினமாக இருந்தது" என்றார்.
நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் அனைவரும் ரன்களை வாரி வழங்கிய நிலையில், ஜேக்கப் டஃபி மட்டும் 4 ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரைப் பாராட்டிய சாண்ட்னர், "ஜேக்கப் டஃபி கடந்த சில வருடங்களாகவே தனது தரத்தை நிரூபித்து வருகிறார். அணியின் மூத்த பந்துவீச்சாளராகப் பொறுப்பேற்று, ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வேகத்தைக் குறைத்தார். அவர் செயல்பட்ட விதம் மகிழ்ச்சி அளிக்கிறது" என்று குறிப்பித்தார்.
கடைசி ஓவர்களில் ரிங்கு சிங் மற்றும் அபிஷேக் சர்மா அதிரடியால் ரன்கள் எகிறியது குறித்துப் பேசிய அவர், "கடைசி கட்டத்தில் யாருக்குமே பந்துவீசுவது கடினம்தான். இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினார்கள். இருப்பினும் இந்தப் போட்டியில் நடந்த தவறுகளைத் திருத்திக்கொண்டு, அடுத்த போட்டியில் வெற்றிபெற முயற்சிப்போம்" என்று சாண்ட்னர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.