கவுஹாத்தி: இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்தத் தோல்வியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து அணி இழந்துள்ளது. போட்டி முடிந்த பிறகு பேசிய நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர், அணியின் தோல்விக்கான காரணங்கள் மற்றும் ஆடுகளத்தின் தன்மை குறித்து விரிவாகப் பேசினார்.
தோல்வி குறித்துப் பேசிய சான்ட்னர், "முதலாவதாக இந்திய பந்துவீச்சாளர்களைப் பாராட்டியே ஆக வேண்டும். அவர்கள் பந்துவீசிய விதம் எங்களுக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. டி20 போட்டிகளைப் பொறுத்தவரை பவர் பிளே ஓவர்களில் விக்கெட்டுகளைக் கைப்பற்றுவது மிக முக்கியம். இந்திய பந்துவீச்சாளர்கள் அதனைச் சரியாகச் செய்தார்கள். ஆரம்பத்திலேயே எங்களுக்குச் சவாலை அளித்தனர்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "பவர் பிளே ஓவர்களுக்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழக்கும்போது, ஒரு பெரிய ஸ்கோரை எட்டுவது மிகவும் கடினமாகிவிடும். கான்வே, ரச்சின் ரவீந்திரா மற்றும் சீஃபர்ட் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது பின்னடைவை ஏற்படுத்தியது. அதன் பிறகு போராடி 150 ரன்களை எட்டினோம். ஆனால் இந்திய அணிக்கு எதிராக இந்த ரன்கள் போதுமானதாக இருக்காது என்பது எங்களுக்குத் தெரியும்" என்று தெரிவித்தார்.
கவுஹாத்தி ஆடுகளம் குறித்துப் பேசிய அவர், "உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இது பேட்டிங்கிற்குச் சாதகமான ஒரு நல்ல ஆடுகளம் தான். மைதானத்தின் வெளிப்பகுதி மிக வேகமாக இருந்தது. எல்லைக்கோடுகளும் சிறியதாக இருந்தன. முதல் இன்னிங்ஸில் கட்டர் வகை பந்துவீச்சு சற்று எடுபட்டது. இருப்பினும், நியாயமாகப் பார்த்தால் இந்த ஆடுகளத்தில் 180 முதல் 190 ரன்கள் வரை அடித்திருக்க வேண்டும். ஆனால் இந்தியப் பந்துவீச்சாளர்கள் எங்களை அதற்கு அனுமதிக்கவில்லை" என்று வருத்தம் தெரிவித்தார்.
இறுதியாக அணியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பேசிய சான்ட்னர், "வீரர்களுக்கு உரியப் பொறுப்புகளை வழங்கியுள்ளோம். இது போன்ற போட்டிகள் வரவிருக்கும் உலகக்கோப்பைத் தொடருக்குச் சிறந்த பயிற்சியாக அமையும். இங்கு ஆடுகளங்கள் தட்டையாகவும், ரன் குவிப்புக்குச் சாதகமாகவும் உள்ளன. ஆனால் உலகக்கோப்பையில் எங்களின் முதல் போட்டி சென்னையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ளது. அங்குச் சூழல் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். எனவே இந்தத் தோல்வியிலிருந்து மீண்டு, நம்பிக்கையுடன் அடுத்த போட்டியை எதிர்கொள்வோம்" என்று கூறினார்.