துபாய்: இந்தியாவுக்கு எதிரான குரூப் சுற்றுப் போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வி அடைந்ததை அடுத்து, அந்த அணியின் கேப்டன் தங்கள் தோல்விக்கு என்ன காரணம் என கூறி இருக்கிறார். இந்திய அணி எந்த திட்டத்தை வைத்து நியூசிலாந்து அணியை பிழிந்து எடுத்தது எனவும் அவர் பேசினார்.
இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய நியூசிலாந்து அணி, இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேன் வில்லியம்சன் 81 ரன்கள் எடுத்தது அதிகபட்சமாக இருந்தது.

மற்ற நியூசிலாந்து வீரர்கள் யாரும் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சை சமாளித்து ரன் குவிக்க முடியாமல் விக்கெட்களை இழந்தனர். இந்திய அணியின் பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி அபாரமாக செயல்பட்டு 5 விக்கெட்களை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்களையும், அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, பாண்டியா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர்.
அது பற்றி மிட்செல் சாண்ட்னர் பேசுகையில், "இது மிகவும் மெதுவான விக்கெட்டாக இருந்தது. இந்தியா நடு ஓவர்களை சுழற் பந்துவீச்சின் மூலம் சிறப்பாக கையாளுவார்கள் என்பதை எதிர்பார்த்து இருந்தோம். இந்த மெதுவான ஆடுகளத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பாக பேட்டிங் ஆடி ரன் குவித்தனர்."
"நாங்கள் எதிர்பார்த்ததை விட இங்கு அதிக ஸ்பின் இருந்தது. இந்திய அணி 4 தரமான ஸ்பின்னர்களை வைத்து நியூசிலாந்து அணியை பிழிந்து எடுத்தது. எங்கள் பந்துவீச்சில் பவர் பிளேவில் விக்கெட்டுகளை வீழ்த்தியது தான் எங்களுக்கு நல்ல வாய்ப்பாக இருந்தது. எங்களின் அடுத்த போட்டி (இரண்டாவது அரையிறுதிப் போட்டி) பாகிஸ்தானில் உள்ள லாகூரில் நடைபெற உள்ளது. அங்கு வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலை இருக்கும் என நம்புகிறோம்." என்றார்.
சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவையும், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்காவையும் எதிர்கொள்ள உள்ளன. மார்ச் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் இந்த அரையிறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளன.