மும்பை: இந்திய மண்ணில் முதல்முறையாக மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக ஒயிட் வாஷ் செய்து வென்ற முதல் அணி என்ற பிரம்மாண்ட சாதனையை செய்து இருக்கிறது நியூசிலாந்து அணி.
டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3 - 0 என முழுமையாக வென்று இருக்கிறது. இந்திய மண்ணில் இதற்கு முன் அதிகபட்சமாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை மட்டுமே எதிரணிகள் முழுமையாக 2 - 0 என வென்று இருந்தன.

முதல்முறையாக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய மண்ணில் இந்தியா முழுமையாக இழந்து இருக்கிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடந்தது. அதில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
அடுத்து புனேவில் நடந்த டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் நடந்தது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 235 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்கள் எடுத்தது.
அடுத்து நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 174 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்கு 147 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இந்திய அணி 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டியை வென்றது. இந்திய மண்ணில், இந்தியாவை 3 - 0 என மூன்று போட்டிகள் டெஸ்ட் தொடரில் வென்ற முதல் அணி என்ற பெருமையை நியூசிலாந்து அணி பெற்றது.
இந்த தோல்வியால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை சிக்கலானதாக மாற்றிக் கொண்டு இருக்கிறது. அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோத உள்ளது. அதில் நான்கு போட்டிகளில் வென்றால் மட்டுமே இந்திய அணி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு நேரடியாக முன்னேற முடியும்.