மும்பை: நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் எக்ஸ் தளத்தில் இந்தியாவின் மேப் தவறாக பதிவிட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. அந்த இந்தியா மேப்பில் வட மாநிலங்களின் எல்லைகள் தவறாக இருந்ததால், இந்திய ரசிகர்கள் பலரும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தை டேக் செய்து நேரடியாக விமர்சித்து வருகின்றனர்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதன் மூலமாக 1988ஆம் ஆண்டுக்கு பின் இந்திய மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வென்றுள்ளது.

36 ஆண்டுகளுக்கு பின் பெற்றுள்ள வெற்றியால் நியூசிலாந்து அணி வீரர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 2வது டெஸ்ட் போட்டியில் விளையாட நியூசிலாந்து அணி தயாராகி வருகிறது. புனே மைதானத்தில் நாளை நடக்கவுள்ள டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால், 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியும்.
இதனிடையே நியூசிலாந்து அணி நிர்வாகம் அதன் ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவின் மேப்பை பதிவிட்டு 3 டெஸ்ட் போட்டிகள் நடக்கும் நகரங்களை குறிப்பிட்டிருந்தது. இது இந்திய ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் நியூசிலாந்து அணி பதிவிட்ட இந்தியாவின் மேப்பில் வட மாநில எல்லைகள் தவறாக இருந்தது. ஏற்கனவே இந்திய எல்லைப் பிரச்சனை தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
அதிலும் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் எல்லைகள் தவறாக உள்ள மேப்பை நியூசிலாந்து அணி நிர்வாகம் பதிவிட்டுள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். அதிலும் இந்திய ரசிகர்கள் பலரும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை டேக் செய்து, நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர். இந்த விவகாரம் சர்ச்சையானதால், நியூசிலாந்து நிர்வாகம் தரப்பில் உடனடியாக அந்த எக்ஸ் தள பதிவு அழிக்கப்பட்டுள்ளது.