வதோரா: இந்தியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி மிகவும் அனுபவமற்ற வீரர்களைக் கொண்டுள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். தற்போதுள்ள வீரர்களை யாருக்கும் அடையாளம் தெரியாது என்று விமர்சித்துள்ளார்.
இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற ஜாம்பவான்கள் இடம்பெற, நியூசிலாந்து அணியானது கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னர் உள்ளிட்ட பல நட்சத்திர வீரர்கள் இல்லாமல் களமிறங்குகிறது.

மேலும், கடந்த 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடியவர்களில் ஆறு பேர் தற்போதைய அணியில் இடம்பெறவில்லை.தனது யூடியூப் சேனலில் பேசிய ஆகாஷ் சோப்ரா, "இதைவிட அடையாளம் தெரியாத ஒரு அணியை நான் இதுவரை பார்த்ததில்லை" எனக் குறிப்பிட்டார்.
மேலும் அவர், "நியூசிலாந்து அணி எப்போதும் ஒட்டுமொத்த பலத்துடன், களமிறங்கும். ஆனால் அதற்கு திறமையான வீரர்கள் அவசியம்" என்றார். இந்த அணியில் ஹென்றி நிக்கோல்ஸ், வில் யங், கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், டெவோன் கான்வே போன்ற ஓரிரு தெரிந்த முகங்கள் மட்டுமே உள்ளன. இவர்களுடன் ஜோஷ் கிளார்க்சன், நிக் கெல்லி, சாக் ஃபெளக்ஸ், ஜேடன் லெனாக்ஸ், மிட்செல் ஹே, ஆதித்யா அசோக், கிறிஸ்டியன் கிளார்க், மைக்கேல் ரே, கைல் ஜேமிசன் போன்ற பல புதிய பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
"இவர்கள் அனைவரும் மிகவும் புதியவர்கள் என்பதால், இவர்களை உங்களுக்குத் தெரியவில்லை என்றால், நீங்கள் கிரிக்கெட்டைப் பின்தொடரவில்லை என்று பொருளல்ல" எனவும் அவர் கூறினார்.இதற்கிடையே, முதல் ஒருநாள் போட்டிக்கு முன்னதாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய ஒருநாள் கேப்டன் ஷுப்மன் கில், இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் முக்கியத்துவத்தை விளக்கினார். ரோஹித் சர்மாவை ஒருநாள் போட்டிகளின் தலைசிறந்த தொடக்க ஆட்டக்காரர் என்றும், விராட் கோலியை ஒருநாள் கிரிக்கெட்டின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் என்றும் அவர் பாராட்டினார்.