இந்தூர்: நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியை தழுவியது. இதன் மூலம் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் நியூசிலாந்து அணி இரண்டிற்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இந்திய மண்ணில் முதல் முறையாக ஒரு நாள் தொடரை நியூசிலாந்து கைப்பற்றி இருக்கிறது.
கம்பீர் பயிற்சியாளராக தலைமை ஏற்ற பிறகு இந்திய மண்ணில் இதுவரை தொடர் வெற்றியை பெறாத நியூசிலாந்து அணி டெஸ்ட் மற்றும் ஒருநாளில் தொடரை கைப்பற்றி அசத்தியிருக்கிறது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்ற நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய் நியூசிலாந்து அணியில் டாரல் மிட்செல் மற்றும் பிலிப்ஸ் ஆகியோர் அபாரமாக சதம் விளாசி அசத்தினர். இதனால் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்துள்ளது.
இதை அடுத்து 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 11 ரன்களின் ஆட்டம் இழக்க, சுப்மன் கில் 23 ரன்களில் வெளியேறினார். மூன்றாவது வீரராக களம் இறங்கிய விராட் கோலி தன்னுடைய வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் மறுமுனையில் ஸ்ரேயாஸ் 3 ரன்னிலும், ராகுல் ஒரு ரன்னிலும் ஆட்டம் இழந்தார்.
ஒரு கட்டத்தில் இந்திய அணி 71 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களத்திற்கு வந்த நிதிஷ்குமார் ரெட்டி மற்றும் விராட் கோலி ஜோடி நிதானமாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. விராட் கோலி 51 பந்துகளில் தன்னுடைய அரை சதத்தை கடக்க நிதிஷ் குமார் 52 பந்துகளில் தன்னுடைய அரை சதத்தை பூர்த்தி செய்தார்.
இந்திய அணியில் ஆல்ரவுண்டர் என்ற பெயரில் இருக்கும் ஜடேஜா பேட்டிங்கில் 12 ரன்கள் மட்டுமே சேர்த்து பெவிலியன் திரும்பினார். இதனால் அனைத்து சுமையும் விராட் கோலி தலையில் விழுந்தது. இந்த நிலையில் யாருமே எதிர்பாராத வகையில் நிதிஷ் குமார் ரெட்டி பேட்டிங்கில் அதிரடி காட்டினார். இரண்டு பவுண்டரி, 2 சிக்சர் என 57 பந்துகளில் அவர் 53 ரன்கள் சேர்க்க விராட் கோலிக்கு நல்ல கம்பெனி கிடைத்தது.
இந்த ஜோடி ஏழாவது விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்தது. அப்போது சிறப்பாக விளையாடிய விராட் கோலி 91 பந்துகளில் தன்னுடைய சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டின் 54-வது சதத்தை பூர்த்தி செய்தார். ஒரு கட்டத்தில் ஹர்சித் ரானா ஆட்டமிழக்க விராட் கோலி மட்டும் தனி ஆளாக நின்று பவுண்டரி, சிக்சர் விரட்டினார். விராட் கோலி கடைசிவரை நின்றிருந்தால் ஒருவேளை இந்தியா வெற்றி பெற்றிருக்கும்.
ஆனால் அவருக்கு துணையாக எந்த வீரரும் இல்லை. ஹர்சித்ரானா 52 ரன்களிலும் சிராஜ் டக்அவுட் ஆகியும் வெளியேற கோலி, குல்திப்பை நம்பினால் சரி வராது என ரன்கூட ஓடாமல் பௌண்டரி சிக்ஸராக அடிக்க முற்பட்டு 124 ரன்களில் ஆட்டம் இழந்தார். குல்தீப் 5 ரன்களில் ரன் அவுட் ஆக இந்திய அணி 46 ஓவர் முடிவில் 296 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து அணி முதல் முறையாக வென்று சாதனை படைத்திருக்கிறது.