மும்பை: இந்திய இளம் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டிக்குக் கிரிக்கெட் உலகில் அதிக வாய்ப்புகளும், போதிய கால அவகாசமும் வழங்கப்பட வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் லியுறுத்தியுள்ளனர். ராஜ்கோட்டில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நிதிஷ் ரெட்டி சிறப்பாகச் செயல்படாத நிலையிலும், அவர் மீது உடனடியாக எந்தக் கருத்தையும் சொல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர்.
நிதிஷ் குமார் ரெட்டி, 20 ரன்களை எடுத்து, தான் வீசிய 2 ஓவர்களில் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. இந்தப் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முன்னதாக, இந்தியாவின் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்ஷே தனது கருத்துகளைக் கூறி, நிதிஷ் ரெட்டிக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா, நிதிஷ் குமார் ரெட்டிக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். "ஒரு ஆல்-ரவுண்டராவது எளிதல்ல. இரண்டு திறமைகளையும் ஒருசேரக் கற்றுத் தேர்ச்சி பெற வேண்டும். ரவீந்திர ஜடேஜா ஒரே இரவில் இப்படி ஆகவில்லை, ஹர்திக் பாண்டியாவும் அப்படியல்ல. சர்வதேச கிரிக்கெட்டில் செலவழித்த காலம்தான் அவர்களை முழுமையான வீரர்களாக்கியது. நிதிஷ் ரெட்டிக்கும் அதே அளவு நேரம் தேவை" என்று உத்தப்பா தெரிவித்தார்.
நிதிஷ் ரெட்டிக்கு வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக முன்னாள் இந்திய தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா சுட்டிக்காட்டியுள்ளார். "அவரை ஏழாவது இடத்தில் பேட்டிங் செய்ய வைக்கிறோம். அங்கு அவருக்குக் குறைந்த வாய்ப்புகளே கிடைக்கின்றன. மேலும் அவர் மிகக் குறைந்த ஓவர்களையே வீசுகிறார். ஒரு ஓப்பனர் அல்லது புதிய பந்துவீச்சாளராக இல்லையென்றால், வாய்ப்புகள் வழங்கப்படாமல் ஒரு இளம் கிரிக்கெட் வீரர் தாக்கத்தை ஏற்படுத்துவது கடினம்" என்று சோப்ரா விளக்கினார். அவருக்கு நீண்ட கால அவகாசம் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரரர் மனோஜ் திவாரி, நிதிஷ் ரெட்டியின் சறுக்கல் மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது முதல் சர்வதேச சதத்திற்குப் பிறகுதான் தொடங்கியது என்றார். "அந்த இன்னிங்ஸுக்குப் பிறகுதான் நிதிஷின் வீழ்ச்சி தொடங்கியது. அதிகப்படியான கொண்டாட்டம் அவரைப் பாதித்திருக்கலாம். அவர் மீண்டும் அடிப்படை விஷயங்களுக்குச் சென்று எல்லாவற்றையும் சரிசெய்ய வேண்டிய நேரம் இது" என்று அவர் தெரிவித்தார். இந்தியா அவரை மேலும் பந்துவீச ஊக்குவிக்க வேண்டும் என்றும், இந்தியாவில் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்கள் அரிது என்றும் அவர் குறிப்பிட்டார்.